பீகார் மாநில சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிரான மனுக்களை விசாரணைக்கு ஏற்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

புதுடெல்லி,

பிகாரில் நடைபெற்று வரும் சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இதில் நாளந்தாவை சேர்ந்த அகிலேஷ் குமார் தாக்கல் செய்த மனுவில், ‘பிகாரில் நடைபெற்று வரும் சாதிவாரி கணக்கெடுப்பு சமத்துவ உரிமைக்கும், அரசமைப்பு சட்டத்திற்கும் எதிராக உள்ளதால் அதை அனுமதிக்கக்கூடாது. சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான அறிவிக்கையை ரத்து செய்ய வேண்டும்’ என கோரியிருந்தார்.

இந்த மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தன. அப்போது இந்த மனுக்கள் விளம்பர நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த நீதிபதிகள், சாதிவாரி கணக்கெடுப்புக்கு தடை விதித்தால் இடஒதுக்கீட்டை எப்படி தீர்மானிக்க முடியும்? என்றும் கேள்வி எழுப்பி, இந்த பொதுநல மனுக்களை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள முடியாது என உத்தரவிட்டனர்.

மேலும் இந்த விவகாரத்தில் பாட்னா ஐகோர்ட்டை நாடவும் அறிவுறுத்திய அவர்கள், மனுக்களை திரும்பபெற அனுமதியளித்து முடித்துவைத்தனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.