புதுடெல்லி: வடமாநிலங்களில் கடும் குளிர் நீடித்து வருகிறது. நேற்று திடீரென மழையும் பெய்ததால் பல இடங்களில் சாலைகள் மூடப்பட்டன. வடமாநிலங்கள் முழுவதும் குளிரின் பிடியில் சிக்கித்தவிக்கிறது. டெல்லி, அரியானா, பஞ்சாப், இமாச்சலபிரதேசம், ஜம்மு, காஷ்மீர், உபி, உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் இயல்பு நிலையை விட அதிக குளிர் நிலவியது. இந்தநிலையில் பனிப்பொழிவுடன் சேர்ந்து நேற்று திடீர் மழை கொட்டியது. இதனால் பல இடங்களில் சாலைகள் மூடப்பட்டன. விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உத்தரகாண்ட் மாநிலத்திலும் பனிகொட்டியது.
அங்கு வீடுகளில் விரிசல் காரணமாக பாதிக்கப்பட்ட ஜோஷிமத் நகரிலும் மழை மற்றும் பனிப்பொழிவால் மக்கள் பாதிக்கப்பட்டனர். உத்தரகாண்ட்டில் கடும் பனிப்பொழிவு மற்றும் மழையால் சாமொலி மாவட்டத்தில் 47 கிராமம், காட் தாலுகா பகுதியில் 19 கிராமம், ஜோஷிமத் பகுதியில் 13, கெய்ர்சயான் பகுதியில் 8 கிராமங்கள் பாதிக்கப்பட்டன. ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது. மேலும் பல சாலைகளில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. விமானப்போக்குவரத்து முடங்கியது. இமாச்சலில் மட்டும் பனிப்பொழிவு மற்றும் மழையால் 278 சாலைகள் மூடப்பட்டன.