ஆதாரை இணைப்பதால் இலவச மின்சார திட்டம் ரத்து ஆகாது: அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி

கரூர்: கரூரில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அளித்த பேட்டியில் கூறியதாவது; மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுவரை 2 கோடிக்கு மேற்பட்ட மின் நுகர்வோர்கள் ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைத்துள்ளனர். இந்த முகாம் இந்த மாதம் கடைசி வரை நடைபெறுகிறது.

மின  இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதால் இலவச மின் திட்டங்கள் ரத்தாகும் என்ற பயம் தேவையில்லை.
விவசாயிகள், விசைத்தறி, கைத்தறி நெசவாளர்களின் குடிசைகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் மற்றும் மின்சார துறையை மேம்படுத்துவதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்தாண்டு ரூ.9,048 கோடி மானியம் வழங்கினார். இந்தாண்டு கூடுதலாக ரூ.4,000 கோடி மானியத்தை வழங்கியுள்ளார். இதனால் இந்த திட்டங்கள் அனைத்தும் தொடர்ந்து செயல்படுத்தப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.