கடலூர் மாவட்டத்தில் வாய்க்காலில் தொப்புள் கொடியுடன் பச்சிளம் பெண் குழந்தை பிணமாக கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் தகோழியூரில் உள்ள வெலிங்டன் ஏரி பாசன வாய்க்காலில் தொப்புள் கொடியுடன் பச்சிளம் பெண் குழந்தை ஒன்று பிணமாக கிடந்துள்ளது. இதைப்பார்த்த அவ்வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்து, இது குறித்து திட்டக்குடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தீயணைப்புத்துறையினர் உதவியுடன் குழந்தையை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், தொப்புள் கொடியுடன் பச்சிளம் பெண் குழந்தையை வாய்க்காலில் வீசி சென்றது யார்? எதற்காக குழந்தையை வீசி சென்றார்கள்? என்று பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.