பாகிஸ்தானில் சோதனைச் சாவடி மீது பயங்கரவாதிகள் தாக்குதல் – 2 பேர் உயிரிழப்பு

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் சமீப காலமாக அந்நாட்டு அரசால் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகள் தொடர்ந்து பல்வேறு தாக்குதல்களை நிகழ்த்தி வருகின்றன. குறிப்பாக காவல்நிலையங்கள், போலீசார் மற்றும் அரசு அதிகாரிகளை குறிவைத்து தாக்குதல்கள் அரங்கேற்றப்படுகின்றன.

அந்த வகையில் கைபர் பக்டுங்க்வா மாகாணத்தில் உள்ள சர்சத்தா மாவட்டத்தில், நவ்ஷேரா சாலையில் போலீசார் சோதனைச் சாவடியில் இருந்தபடி தங்கள் பணிகளை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் இந்த சோதனைச் சாவடி மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.

இந்த திடீர் தாக்குதலில் 3 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, 2 பேர் வழியிலேயே உயிரிழந்துவிட்ட நிலையில், ஒருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தாக்குதலை நிகழ்த்திவிட்டு பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.