வரும் நாடாளுமன்ற தேர்தலில் உ.பி.யில் 80 தொகுதிகளிலும் பா.ஜ.க. தோல்வி அடையும் – அகிலேஷ் யாதவ்

லக்னோ,

நாடாளுமன்ற பொதுத்தேர்தல் அடுத்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடக்க உள்ளது. மத்தியில் ஆளும் பா.ஜ.க. தொடர்ந்து 3-வது முறையாக வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை படைப்பதற்காக இப்போதே வரிந்து கட்டிக்கொண்டு உத்திகள் வகுத்து வருகிறது.

இந்த தேர்தலில் நாட்டின் பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் 80 தொகுதிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவற்றில் பெரும்பான்மை தொகுதிகளை கைப்பற்றுகிற கட்சிதான் மத்தியில் ஆளுங்கட்சியாக வருவதற்கு வாய்ப்பு கணிசமாக உள்ளது.

80 தொகுதிகளிலும் தோல்வி…

இதையொட்டி உ.பி. முன்னாள் முதல்-மந்திரியும், சமாஜ்வாடி கட்சித்தலைவருமான அகிலேஷ் யாதவ் கூறியதாவது:-

உத்தரபிரதேசத்தில் பா.ஜ.க. 80 தொகுதிகளிலும் தோல்வி அடையும். இன்னும் பல பத்து ஆண்டுகள் ஆட்சி செய்வோம் என்று அந்தக் கட்சி கூறுகிறது. அதன் தலைவரோ இன்னும் 50 ஆண்டுகள் ஆட்சி செய்வோம் என்கிறார். ஆனால் பா.ஜ.க. ஆட்சியின் ஆயுள் நாட்கள் எண்ணப்படுகின்றன. பா.ஜ.க.வின் தேசியத்தலைவர், இந்த மாநிலத்தில் உள்ள 2 மருத்துவக் கல்லூரிகளுக்கு வருகை தரவேண்டும். அப்படி வந்தால், எத்தனை இடங்களில் அவர்கள் வெற்றி பெறப்போகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடியும்.லக்னோவில் மாநில செயற்குழு கூட்டத்தைக்கூட்டும் பா.ஜ.க., போலீஸ் காவலில் இறந்தவர்கள் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி நிதியும், அரசு வேலையையும் வழங்க தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

பா.ஜ.க. பாரபட்சம் காட்டுகிறது.

முதலீடுகள்

லண்டனில் இருந்தும், நியூயார்க்கில் இருந்தும் உத்தரபிரதேசத்துக்கு முதலீடுகளைக் கொண்டு வருவதாக சொல்கிறார்கள். ஆனால் அவர்கள் மாவட்டங்களில் இருந்து இப்போது முதலீடுகளைக் கொண்டு வருகிறார்கள். அவர்கள் யாரை முட்டாள் ஆக்குகிறார்கள்? என்று அவர் கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.