வெள்ளப்பெருக்கில் சேதமான பொருட்களுடன் கிடந்த ஏடிஎம் கார்டை பயன்படுத்தி ரூ.6.31 லட்சம் அபேஸ்: தமிழ்நாட்டைச் சேர்ந்த லாரி டிரைவர் கைது

திருவனந்தபுரம்: கேரளாவில்  இருந்து பழைய வீட்டு பொருட்களுடன் கிடைத்த ஏடிஎம் கார்டை பயன்படுத்தி  ரூ.6.31 லட்சம் பணத்தை அபேஸ் செய்த தமிழக லாரி டிரைவரை செங்கனூர் போலீசார்  கைது செய்தனர். கேரள மாநிலம் செங்கனூரை  சேர்ந்தவர் ஷாஜி. இவர் துபாயில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து  வருகிறார். கடந்த இரு வருடங்களுக்கு முன் செங்கனூர் பகுதியில் கடும்  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் ஷாஜியின் வீட்டுக்குள்ளும் தண்ணீர்  புகுந்தது. இதில் வீட்டில் இருந்த ஏராளமான பொருட்கள் சேதமடைந்தன. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் ஊருக்கு திரும்பிய ஷாஜி சேதமான  பொருட்களை பழைய வீட்டு சாமான்களை வாங்குபவர்களிடம் கொடுத்து விட்டார்.  

அப்போது அவரது வங்கி ஏடிஎம் கார்டும் தவறுதலாக பழைய பொருட்களுடன்  சென்றுவிட்டது. ஏடிஎம் கார்டுடன் ரகசிய குறியீட்டு எண்ணையும் அவர் குறித்து  வைத்திருந்தார். இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் ஷாஜி  வங்கிக்கு சென்று தன்னுடைய கணக்கிலிருந்து பணத்தை எடுக்க முயன்றார். ஆனால்  கணக்கிலிருந்து ரூ.6.31 லட்சம் பணம் எடுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனால்  அதிர்ச்சியடைந்த ஷாஜி, இது தொடர்பாக செங்கனூர் போலீசில் புகார் செய்தார்.  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

போலீசாரின் தீவிர  விசாரணையில் திருவனந்தபுரம், புனலூர், மதுரை, நாமக்கல், சேலம் ஆகிய  இடங்களில் உள்ள ஏடிஎம் மையங்களில் இருந்து பணம் எடுக்கப்பட்டது  தெரியவந்தது. இதைத் தொடர்ந்து செங்கனூர் போலீசார் தமிழ்நாட்டில் பணம்  எடுக்கப்பட்ட மதுரை, நாமக்கல் உள்பட இடங்களில் விசாரணை நடத்தினர். ஏடிஎம்  மையங்களில் இருந்த கண்காணிப்பு கேமராவை பரிசோதித்தபோது ஒருவர் லாரியில்  வந்து பணத்தை எடுத்துச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து லாரி டிரைவர் தான்  ஏடிஎம் கார்டை எடுத்தது என தெரியவந்தது.
தொடர்  விசாரணையில் தென்காசியை சேர்ந்த பாலமுருகன் (42) என்பவர் தான் பணத்தை எடுத்து சென்றது தெரியவந்தது.

லாரி டிரைவரான இவருக்கு பழைய பொருட்கள் கொண்டு வருவதற்காக   திருவல்லா சென்றபோது அங்குள்ள கடையிலிருந்து ஷாஜியின் ஏடிஎம் கார்டு  கிடைத்தது. அதில் ரகசிய குறியீட்டு எண்ணும் இருந்ததால் அதை பயன்படுத்தி மிக  எளிதில் பணத்தை எடுத்துள்ளார். இதையடுத்து பாலமுருகனிடருந்து ரூ.6 லட்சம்  பணத்தை போலீசார் கைப்பற்றினர். அவரை கைது செய்த போலீசார் விசாரணைக்கு பின்  கேரளா கொண்டு சென்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.