திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே அரசுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த புகாரின் அடிப்படையில், ஆரணி நகர் காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி விசாரணை மேற்கொண்டார்.
இதில், விடுதலை சிறுத்தைகள் கட்சி கிழக்கு மாவட்ட செயலாளர் பாஸ்கர் என்பவர், காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தியை சாதியின் அடிப்படையில் திட்டி உள்ளார்.
இதன் காரணமாக கடந்த ஜனவரி 8ம் தேதி பாஸ்கர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பின் ஜாமினில் வெளிவந்த பாஸ்கரனுக்கு, விடுதலை சிறுத்தை கட்சியினர் வரவேற்பு அளித்து ஊர்வலமாக சென்றனர்.
அப்போது ஒட்டுமொத்த தமிழக காவல்துறையையும் அசிங்கப்படுத்தும் விதமாக விசிகவினர் கோஷமிட்டு கொண்டே சென்றனர்.
இதுகுறித்த காணொளி வெளியாகிய நிலையில், இந்த சர்ச்சை ஊர்வலத்தில் பங்கேற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் பாஸ்கர் உட்பட 50க்கும் மேற்பட்ட விசிக நிர்வாகிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
மேலும், 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கிய குற்றவாளியான விசிக மாவட்ட செயலாளர் பாஸ்கர் தலைமறைவாக உள்ளார் என்று தகவல் வெளியாகி இருந்தது.
இதற்கிடையே, திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை தரப்பில் ‘தேடப்படும் கயவர்கள்’ என்று அறிவிப்பு வெளியானதாக ஒரு புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகியது.
இந்த புகைப்படம் போலியானது என்றும், திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை தரப்பில் இப்படி ஒரு அறிவிப்பு வெளியிடவில்லை என்றும் டிவிட்டர் பக்கத்தில் திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
— Tiruvannamalai District Police (@TVMalaiPolice) January 29, 2023