கும்பகோணம் | உதவிப் பேராசிரியரை இடமாற்றம் செய்யக் கோரி அரசுக் கல்லூரி மாணவர்கள் காலவரையற்ற போராட்டம்

கும்பகோணம்: கும்பகோணம் அரசு ஆண்கள் கல்லூரி பிரதான வாயிலில் புவியியல் துறை மாணவர்கள் காலவரையற்ற போராட்டத்தை இன்று காலை முதல் தொடங்கினர்.

கும்பகோணம் அரசு ஆண்கள் கல்லூரியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் புவியியல் துறை உதவிப் பேராசிரியர் சி.வடிவேல், ஒருமையில் பேசியதாக மாணவர்கள் நடத்திய போராட்டத்தைத் தொடர்ந்து, கல்லூரி கல்வி இயக்குநர், அவரை திருச்சி, பெரியார் ஈ.வே.ரா.அரசு கலைக்கல்லூரிக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டார்.

இந்நிலையில், அவர் கடந்த 27-ம் தேதி, மீண்டும் இக்கல்லூரிக்கு பணியிடம் மாற்றம் பெற்றுக் கொண்டு, பணிக்கு வந்ததையறிந்த புவியியல் துறையினர் கடந்த 3 நாட்களாக கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆனால் கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ளாததையடுத்து, புவியியல் 2-ம் ஆண்டு எம்எஸ்சி படிக்கும் மாணவர் இளந்தென்றல் தலைமையிலான மாணவர்கள், உதவிப்பேராசிரியர் சி.வடிவேலை, உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, கல்லூரியின் பிரதான வாயிலில் காலவரையற்ற போராட்டத்தை இன்று (ஜன.31) காலை முதல் தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில், அதே வகுப்பைச் சேர்ந்த 9 மாணவர்கள், சி.வடிவேலை இடமாற்றம் செய்யக் கூடாது என கல்லூரி முதல்வரிடம் மனு அளித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.