பொன்முடிக்கு எதிரான நடவடிக்கை: நீதிமன்றம் இடைக்கால தடை!

வருமான வரி வழக்கில், தமிழ்நாடு உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடிக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வருமான வரித் துறைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொழில் அதிபர் சேகர் ரெட்டிக்கு ( தற்போது சேகர்) சொந்தமான எஸ். ஆர்.எஸ். மைனிங் நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்திய போது, அமைச்சர் பொன்முடிக்கு 60 லட்சம் ரூபாய் வழங்கியதாக குறிப்புகள் கைப்பற்றப்பட்டன.

அதன் அடிப்படையில் , அமைச்சர் பொன்முடிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இந்த நோட்டீசை ரத்து செய்யக்கோரி அமைச்சர் பொன்முடி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்த போது பொன்முடி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், எஸ்.ஆர்.எஸ். மைனிங் நிறுவனத்திடம் இருந்து அமைச்சர் பொன்முடி பணம் பெற்றதற்கான ஆதாரம் எதுவும் இல்லை என கூறினார்.

இதனையடுத்து, அமைச்சர் பொன்முடியின் மனுவுக்கு பதிலளிக்கும்படி, வருமான வரித்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, நோட்டீசின் அடிப்படையில் கடும் நடவடிக்கை எடுக்க கூடாது என வருமான வரித்துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை பிப்ரவரி 27ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.