கன்னியாகுமரியில் படகு போட்டி: 15 படகுகளில் சீறிப்பாய்ந்த மீனவர்கள்

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் இருந்து இடிந்தகரைக்கு நேற்று படகு போட்டி நடந்தது. நெல்லை மாவட்டம் இடிந்தகரை புனித லூர்து அன்னை ஆலய திருவிழாவையொட்டி நேற்று பாய்மர படகு போட்டி நடைபெற இருந்தது. புயல் எச்சரிக்கை காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. எனவே படகு போட்டி நடத்தவும் போலீசார் அனுமதி மறுத்தனர். ஆனால் போலீசாரின் தடையை மீறி படகு போட்டியில் பங்கேற்பதற்காக நேற்று காலை முதல் நெல்லை மாவட்டத்தில் இருந்து கோவளம் கடற்பகுதிக்கு 15க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவ இளைஞர்கள் வந்தனர்.

இதையடுத்து 100க்கும் மேற்பட்ட போலீசார் கோவளம் கடற்கரையில் குவிக்கப்பட்டனர். படகுகளில் வந்தவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். போட்டியில் பங்கேற்பதில் இளைஞர்கள் உறுதியாக இருந்தனர். இதையடுத்து போலீசார் அனுமதி அளித்ததை தொடர்ந்து காலை 10.40 மணிக்கு போட்டி தொடங்கியது. 15 பாய்மர படகுகள் கோவளத்தில் இருந்து போட்டியில் பங்கேற்றன. இடிந்தகரை வரை அவர்களுக்கு பாதுகாப்பாக 6 படகுகளில் மீனவர்கள் சென்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.