சூடுபிடிக்கும் திரிபுரா தேர்தல் களம்; அரசியல் தலைவர்கள் தீவிரம்.!

கம்யூனிஸ்ட்களின் கோட்டை என கருதப்பட்ட திரிபுராவில், கடந்த சட்டப்பேரவை தேர்தலில் வென்று பாஜக வெற்றிக் கொடி ஏற்றியது. சுமார் 25 ஆண்டுகால கம்யூனிஸ்ட் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்த பாஜக, வடகிழக்கில் பாஜகவிற்கு செல்வாக்கு கிடையாது என்ற பிம்பத்தை உடைத்து, நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் பரந்து விரிந்த கட்சி என்ற அடையாளத்தை பெற்றது.

தற்போது பாஜக வெற்றிகரமாக 5 ஆண்டுகள் ஆட்சியை நிறைவு செய்யப் போகிறது. பாஜக 2018ல் ஆட்சி பொறுப்பேற்றதும் பிப்லாப் குமார் தேப் அவர்கள் மாநில முதல்வராக பதவி வகித்து வந்தார். இந்த சூழலில் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் மத்தியில் ஏற்பட்ட அதிருப்தி மனநிலை காரணமாக கடந்த ஆண்டு அவரை மாற்றம் செய்து பாஜக தலைமை அதிரடி காட்டியது.

இதையடுத்து மாணிக் சாகா முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். இந்தநிலையில் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 60 சட்டமன்ற தொகுதிகல் இருக்கின்றன. இதற்கான தேர்தல் வரும் பிப்ரவரி 16ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ஆம் தேதி நடக்கிறது. மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 31 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சியே பெரும்பான்மை பெற்று ஆட்சிக் கட்டிலில் அமரும்.

சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. ஏற்கனவே இருமுனை போட்டியாக பாஜக, காங்கிரஸ் – இடதுசாரிகள் ஆகியோர் தேர்தலுக்கு தயாராகி வருகின்றனர். இந்நிலையில் மூன்றாவது கட்சியாக திப்ரா மோதா (TIPRA Motha) உத்வேகம் காட்டி கொண்டிருக்கிறது. இது திரிபுரா காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் பிரத்யோத் பிக்ராம் மாணிக்யா தெப்பர்மா தொடங்கிய அரசியல் கட்சி என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனியாக போட்டியிடுகிறது.

அதைத் தொடர்ந்து திரிபுராவில் மும்முனை போட்டி நிலவிவருகிறது. இந்தநிலையில் வருகின்ற திரிபுரா சட்டப்பேரவை தேர்தலில், அதிக முறை முதல்வராக இருந்த மாணிக் சர்கார் போட்டியிடவில்லை என அறிவிக்கப்பட்டது. மாணிக் சர்கார் போட்டியிடாததன் காரணம் தற்போது வெளியாகியுள்ளது. 74 வயதான மாணிக் சர்காருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை எனவும், மாறாக அவர் மாநிலம் முழுவதும் இடதுசாரி பிரச்சாரத்தை வழிநடத்துவார் என்றும் கட்சி அறிவித்தது.

இந்தநிலையில் திரிபுரா வேட்பாளர்கள் பட்டியலை பாஜக இன்று வெளியிட்டது. 48 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ள பாஜக, 6 எம்எல்ஏக்களை போட்டியிட வாய்ப்பு அளிக்கவில்லை. மேலும் 11 பெண்களுக்கு போட்டியிட வாய்ப்பளித்துள்ளது. 12 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளார் பட்டியில் விரைவில் வெளியிடப்படும் என அறிவித்தது.

இந்தநிலையில் திரிபுராவில் மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் 55 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக பாஜக அறிவித்துள்ளது.திரிபுரா பழங்குடி மக்கள் முன்னணி (IPFT) உடன் கூட்டணி குறித்த ஆலோசனையில் ஈடுபட்ட பாஜக அந்த கட்சிக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. ஏற்கனவே 48 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக, மீதமுள்ள 7 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் திரிபுரா தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், இந்த வாரம் உள்துறை அமைச்சர் அமித்ஷா, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் பாஜக சார்பிலும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திரிணாமுல் காங்கிரஸ் சார்பிலும் பிரச்சாரம் நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நாட்டின் முக்கிய அரசியலாளர்கள் பிரச்சாரத்தில் ஈடுபடுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.