கர்நாடக மாநில அரசியலில் நாளுக்கு நாள் பேச்சு, சண்டை வலுத்து வருகிறது. குறிப்பாக காங்கிரசின் சித்தராமையாவும், அவரது சீடர் ஜமீர் அகமது கானும் ம.ஜ.த.,வுக்கு எதிராக திரும்பி உள்ளனர்.
கர்நாடகா அரசியலில் முன்னாள் முதல்வர்கள் சித்தராமையா – குமாரசாமிக்கு இடையிலான அரசியல் மோதல் முற்றி உள்ளது. கடந்த முறை ம.ஜ.த.,வை கண்டித்த சித்தராமையா, ‘குமாரசாமி அப்பா சத்தியமாக ம.ஜ.த., ஆட்சிக்கு வராது என்றார். இதனால் ஏற்பட்ட பாதிப்பை அவர் சந்தித்தார்.
இதுவரை ம.ஜ.த., மற்றும் குமாரசாமி விவகாரத்தில் ஒதுங்கி இருந்த சித்தராமையா, மீண்டும் அவரை விமர்சிக்க துவங்கியுள்ளார். ‘இந்த முறை ஆட்சிக்கு வரலாம் என்று ம.ஜ.த., தலைவர்கள் கனவு காண்கின்றனர்; அது நடக்காது’ என குமாரசாமியை சீண்டி உள்ளார்.
இதேபோல மாநில அரசியலில், தேவகவுடா பாசறையில் வளர்ந்த முன்னாள் அமைச்சர் ஜமீர், தற்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வாக உள்ளார். இவருக்கும், குமாரசாமிக்கும் மோதல் இருந்தது. தற்போது இவரும் ம.ஜ.த.,வுக்கு எதிராக பேச துவங்கி விட்டார். இதன் மூலம் குரு, சிஷ்யர்களான சித்தராமையாவும், ஜமீரும் ஒரே நேரத்தில், ‘ம.ஜ.த.,வினர் ஆட்சியை பிடிக்க முடியாது’ என பேசி வருகின்றனர்.
கடந்த முறை, சித்தராமையா – ம.ஜ.த., மோதல் வேறு வடிவம் பெற்று, ஒக்கலிகர் சமூகத்தை சித்தராமையாவுக்கு எதிராக திரும்ப வைத்தது. இந்த முறை என்ன நடக்குமோ என மூத்த காங்கிரஸ் தலைவர்கள் தீவிர ஆலோசனையில் உள்ளனர்.
– நமது நிருபர் —
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
