ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முறைகேடுகள் வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக விசாரிக்க உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கும் வரை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

கோவை மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் தலைவர் ஈஸ்வரன் தாக்கல் செய்த மனுவில், தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க பல்வேறு சட்டங்கள் உள்ள நிலையிலும், வாக்களர்களுக்கு பணபட்டுவாடா செய்வது தொடர்வதாகவும், இதனை தடுக்க தேர்தல் ஆணையம் போதிய நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் குற்றம்சாட்டியுள்ளார். 

ஒவ்வொரு தேர்தலின் போதும், பணம் கொடுத்து வாக்கு வாங்கப்படுவதாக குற்றம்சாட்டியுள்ள அவர், தவறிழைப்பவர்கள் தண்டிக்கப்படுவதில்லை எனவும் கூறியுள்ளார்.  தேர்தல் முறைகேடுகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க  உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில், வெளிமாநில ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அதிகாரிகள் கொண்ட குழு அமைக்க வேண்டுமென மனுவில் வலியுறுத்தியுள்ளார். 

இது தொடர்பாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரிக்கு அனுப்பப்பட்ட மனு மீது எந்த பதிலும் அளிக்கப்படவில்லை எனவும், தேர்தல் முறைகேடு தொடர்பான வழக்குகளை விசாரிக்க  உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் வெளிமாநில ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அதிகாரிகள் கொண்ட குழு அமைக்க உத்தரவிட வேண்டுமெனவும், அதுவரை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நடத்த தடை விதிக்க வேண்டுமெனவும் மனுவில் வலியுறுத்தி இருந்தார்.

இன்று இந்த மனுவை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, ஏற்கனவே மற்றொரு வழக்கில் இதுசம்பந்தமான நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.