சென்னை: சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் பி.தனபால் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: சிவில் நீதிபதி பதவியில் (புதுச்சேரி நீதித் துறை பணி) 19 காலியிடங்கள் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.
இப்பதவிக்கு வழக்கறிஞர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 25 முதல் 35 வரை. எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கு 25 முதல் 40 வரை. இந்த ஆண்டு சட்டப் படிப்பை முடித்தவர்களாக இருந்தால் வயது 22 முதல் 27-க்குள் இருக்க வேண்டும். தேர்வுக்கட்டணம் ரூ.2 ஆயிரம். எஸ்சி, எஸ்டி வகுப்பினர் மற்றும் பெண்கள், மாற்றுத் திறனாளிகள் தேர்வுக் கட்டணம் செலுத்த தேவையில்லை.
முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அதன்படி முதல்நிலைத் தேர்வு ஜுன் 3-ம் தேதியும் அதைத்தொடர்ந்து முதன்மை எழுத்துத் தேர்வு ஆகஸ்ட் 5 மற்றும் 6-ம் தேதியும், இறுதியாக நேர்காணல் அக்டோபர் 9-ம் தேதியும் நடைபெறும்.
உரிய கல்வித் தகுதி, வயது வரம்பு உடையவர்கள் https://www.mhc.tn.gov.in மூலம் ஏப்.1-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.