ஆஸ்கர் விருதுகளை இதுவரை வென்ற இந்தியர்கள்

உலக அளவில் வழங்கப்படும் திரைப்பட விருதுகளில் முக்கியமான ஒரு விருதாகக் கருதப்படுவது அமெரிக்காவில் வழங்கப்படும் ஆஸ்கர் விருதுகள். 95வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நடைபெற்ற முடிந்தது. 'ஆர்ஆர்ஆர்' தெலுங்குப் படத்தில் இடம் பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் சிறந்த ஒரிஜனல் பாடலுக்கான விருதையும், 'த எலிபென்ட் விஸ்பரர்ஸ்' என்ற குறும்படம் சிறந்த டாகுமென்டரி குறும்படத்திற்கான விருதையும் வென்றது.

இந்தத் தலைமுறையினருக்கு ஆஸ்கர் விருதுகள் பற்றி அதிகம் தெரியக் காரணமாக இருந்தவர் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான். 2009ம் ஆண்டு நடைபெற்ற 81வது ஆஸ்கர் விருதுகளில் சிறந்த ஒரிஜனல் ஸ்கோர் மற்றும் சிறந்த ஒரிஜனல் பாடல் என இரண்டு ஆஸ்கர் விருதுகளை அவர் இசையமைத்த 'ஸ்லம்டாக் மில்லியனர்' படத்திற்காகப் பெற்றார். 'ஜெய் ஹோ' பாடலுக்காக ரஹ்மான் பெற்ற அந்த விருது, பாடலை எழுதிய குல்சாருக்கும் கிடைத்தது. அதே படத்திற்கு சிறந்த சவுண்ட் மிக்சிங்கிற்காக ரசூல் பூக்குட்டியும் ஆஸ்கர் விருதை இயான் டாப், ரிச்சர்ட் ப்ரிக்கி ஆகியோருடன் இணைந்து பெற்றார்.

அதற்கு முன்பு 1992ம் ஆண்டு நடைபெற்ற 64வது ஆஸ்கர்விருது விழாவில், பெங்காலி இயக்குனர் சத்யஜித் ரே-க்கு, கௌரவ வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

1982ம் ஆண்டு 'காந்தி' படத்திற்காக பானு அத்தையா சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றார்.

இந்த வருடம் வழங்கப்பட்ட ஆஸ்கர் விருதுகள் இந்தியத் திரைப்படத் தயாரிப்புகள். இதற்கு முன்பு கிடைத்த விருதுகள் வெளிநாட்டுத் தயாரிப்புகள் ஆகும். அதுதான் இந்த வருட ஆஸ்கர் விருதுக்கான சிறப்பம்சம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.