சென்னை பூக்கடை, பாண்டி பஜார், தி.நகர், தேனாம்பேட்டை ஆகிய பகுதிகளில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு லேப்டாப், பணம் உள்ளிட்ட பொருள்கள் கொள்ளையடிக்கப் பட்டன. இது தொடர்பாக தொடர்ச்சியாக காவல் நிலையங்களுக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில் நடவடிக்கை எடுக்க சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். அதையடுத்து, கூடுதல் கமிஷனர் பிரேமானந்த் சின்ஹா, இணை கமிஷனர் சிபிச்சக்கரவர்த்தி மேற்பார்வையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
தனிப்படை போலீஸார் கொள்ளைச் சம்பவங்கள் நடந்த பகுதிகளிலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது கொள்ளைக் கும்பல் குறித்த தகவல்கள் தனிப்படை போலீஸாருக்குக் கிடைத்தன. கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட சிலரின் செல்போன் சிக்னல்கள் பெங்களூருவில் காட்டியது. அதனால் தனிப்படை போலீஸார் அங்கு சென்றனர். போலீஸார் வருவதை முன்கூட்டியே தெரிந்துகொண்ட கும்பல், பெங்களூருவிலிருந்து டெல்லிக்குத் தப்பியது. ஆனால் ஒரே ஒரு கொள்ளையன் மட்டும் போலீஸாரிடம் சிக்கிக் கொண்டான். அவன் பெயர் சபரி, திருச்சி ராம்ஜிநகரைச் சேர்ந்தவன். அவனிடம் விசாரித்தபோது கார்களின் கண்ணாடிகளை உடைத்து கொள்ளையடிக்கும் திருச்சி ராம்ஜிநகர் கொள்ளைக் கும்பல் குறித்த தகவல்கள் தெரியவந்தன.
இது குறித்து நம்மிடம் பேசிய தனிப்படை போலீஸார், “சென்னையில் நடந்த இந்தக் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டது திருச்சி ராம்ஜி நகரைச் சேர்ந்த கொள்ளைக் கும்பல் என தகவல் கிடைத்ததும், அவர்களைத் தேடினோம். இந்தக் கொள்ளைக் கும்பலின் தலைவனாக சபரி செயல்பட்டது தெரியவந்தது. அவன்மீது பாண்டி பஜார், தேனாம்பேட்டை, திருச்சி ராம்ஜிநகர் ஆகிய காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. திருச்சி ராம்ஜி நகர் கொள்ளையர்கள், நூதன முறையில் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுவார்கள். தி.நகர், பாண்டி பஜார், பூக்கடை உள்ளிட்ட இடங்களுக்கு வருபவர்களின் கார்களின் கண்ணடிகளை சத்தமில்லாமல் உடைக்க ஹேர்பின்களையும், சேஃப்ட்டி பின்களையும், கையடக்க இரும்பு குண்டுகளையும் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
கைதுசெய்யப்பட்ட சபரியிடமிருந்து ஆறு லேப்டாப்களைப் பறிமுதல் செய்திருக்கிறோம். இந்த வழக்கில் திருச்சி ராம்ஜி நகரைச் சேர்ந்த தீபக், மதன், பிரதீப், விவேக் உள்ளிட்ட சிலரைத் தேடிவருகிறோம். ராம்ஜி நகர் கொள்ளையர்களைப் பொறுத்தவரை வழக்கில் தங்கள் ஊரைச் சேர்ந்தவர்களை போலீஸ் தேடிவந்தால் வழக்குக்கு தொடர்பு இல்லாதவர்களை சரணடையச் செய்துவிடுவது வழக்கம். அதைப் போல இந்த வழக்கிலும் நடக்காமலிருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருக்கிறோம். மேலும், 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சென்னை அண்ணா நகர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் திருச்சி ராம்ஜி நகரைச் சேர்ந்த எட்டு பேர்கொண்ட கும்பல் கார் கண்ணாடிகளை உடைத்து லேப்டாப்களைத் திருடியது. அந்த வழக்கிலும் திருச்சி ராம்ஜி நகரைச் சேர்ந்த கொள்ளைக் கும்பல் சிக்கியது. அதே ஸ்டைலில் மீண்டும் சென்னையில் கார் கண்ணாடிகளை உடைத்து கொள்ளைச் சம்பவம் நடந்திருக்கிறது. அதனால் சாலை ஓரங்களில் கார்களை நிறுத்துபவர்கள் காருக்குள் விலை உயர்ந்த பொருள்களை வைப்பதை தவிர்க்க வேண்டும் என விழிப்புணர்வையும் ஏற்படுத்த திட்டமிட்டிருக்கிறோம்” என்றனர்.