நாடு முழுவதும் சிபிஎஸ்இ பள்ளிகளில் அடுத்த கல்வி ஆண்டுக்கான பாடங்களை கற்பிக்க கூடாது: ஒன்றிய இடைநிலை கல்வி வாரியம் எச்சரிக்கை

வேலூர்: மாணவர்களுக்கு அடுத்த கல்வியாண்டுக்கான பாடங்களை ஏப்ரல் 1ம்தேதிக்கு முன்னதாக கற்பிக்கக் கூடாது என்று ஒன்றிய இடைநிலை கல்வி வாரியம் சிபிஎஸ்இ பள்ளிகளை எச்சரித்துள்ளது. சிபிஎஸ்இயின் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளையும், பிளஸ் 2 பொதுத்தேர்வு ஏப்ரல் 5ம்தேதியும் முடிகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் சிபிஎஸ்இ கட்டுப்பாட்டில் உள்ள பெரும்பாலான பள்ளிகளில் அடுத்த கல்வியாண்டுக்கான பாடங்களுக்கு இப்போதே சிறப்பு வகுப்புகள் எடுக்கப்பட்டு கற்பிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக, அடுத்த ஆண்டு பொதுத்தேர்வு எழுத உள்ள 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான பாடத்திட்டங்களை இப்போதே நடத்தி வருவதாக புகார்கள் எழுந்துள்ளது.

இதையடுத்து, சிபிஎஸ்இ வாரியம் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு எச்சரிக்கையுடன் கூடிய அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளது. அதில், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சிபிஎஸ்இ பள்ளிகளில், அடுத்த கல்வியாண்டுக்கான பாடத்திட்டத்தை முன்கூட்டியே நடத்தி வருவதாக தெரிய வந்துள்ளது. இதனால் மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்படுவதுடன், அவர்களுக்கு கவலையையும், மனரீதியிலான நெருக்கடியையும் ஏற்படுத்தும். எனவே, திட்டமிட்ட கல்வித் திட்டத்தின் அடிப்படையில், ஏப்ரல் 1ம் தேதிக்கு பின்னரே அடுத்த கல்வியாண்டுக்கான பாடத்திட்டங்களை நடத்த வேண்டும். இதை அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், கட்டாயம் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.