நாடாளுமன்றம் முன்பு போராட முயன்ற தமிழக விவசாயிகள்: நீதி கேட்டு நெடும் பயணம் டெல்லியில் நிறைவு

புதுடெல்லி: தமிழக விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் தமிழகத்தில் துவங்கிய நீதிகேட்டு நெடும் பயணம் செவ்வாய்க்கிழமை டெல்லியில் நிறைவு பெற்றது. நாடாளுமன்றம் முன்பு போராட முயன்ற தமிழக விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் கடந்த மார்ச் 2ம் தேதி நீதிகேட்டு நெடும் பயணம் துவங்கியது. கன்னியாகுமரியில் துவங்கிய இந்த பயணத்தின் நிறைவு விழா, டெல்லி ஜந்தர்மந்தரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முன்னதாக, தமிழகத்திலிருந்து வந்திருந்த சுமார் ஐந்நூறு விவசாயிகள் நாடாளுமன்றத்தை நோக்கி செல்ல முயன்றனர். அவர்களை டெல்லி மாநில காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இது குறித்து போராட்டத்தை தலைமையேற்று நடத்திய பிஆர்.பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியது: இந்த நீதி கேட்கும் நெடும் பயணம் கேரளா, சென்னை, ஆந்திரா, தெலங்கானா, சத்தீஸ்கர், ஒடிசா, மேற்குவங்கம், பீகார், ஜார்கண்ட், ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலங்கள் வழியே வந்தடைந்தது.

அம்மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் அமைச்சர்களை சந்தித்து இந்திய விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தினோம். அனைவரும் எங்களுக்கு ஆதரவு தருவதாக உறுதியளித்தனர். டெல்லி மாநில மூத்த அமைச்சர் கோபால்ராயை சந்தித்து மனு அளித்தோம். தமிழ்நாடு முதல்வர் எங்கள் பயணக்குழுவை சந்திக்க மறுத்ததோடு, முன்கூட்டியே தெரிவிக்காமல் ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளின் பிரதிநிதிகளை வெயிலில் காக்க வைத்து தேசிய அளவில் விவசாயிகளை அவமதித்துவிட்டார். இது விவசாயிகளால் மன்னிக்க முடியாத குற்றமாக தொடர்கிறது. பிரதமர் மோடி விவசாயிகளுக்கு விரோதமான கொள்கைகளை தொடர்ந்து பின்பற்றுகிறார்.

கடந்த டிசம்பர் 2021ல் முடிந்த தொடர் போராட்டக் களத்தில் விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்ற முன்வரவில்லை. விளைநிலங்கள் நிலக்கரி சுரங்கம் அமைக்கவும், உயர்மின் கோபுரங்கள் அமைக்கவும், விமான நிலையங்கள் அமைத்து பெருநிறுவனங்களிடம் ஒப்படைக்கவும் விவசாயிகள் ஒப்புதல் இல்லாமல் கையகப்படுத்துவது தொடர்கிறது. மரபணு மாற்று விதைகளை அனுமதிப்பதோடு, பெருநிறுவனங்களை சந்தைப்படுத்துவதிலும், உற்பத்தியிலும் அனுமதிக்கிறது. ஒட்டுமொத்தமாக இந்திய விவசாயிகளை அந்நிய பெருமுதலாளிகளிடம் அடகுவைக்க முயற்சிக்கிறது. விவசாயிகள் பெற்ற கடனுக்காகவும் கல்வி கடனுக்காகவும் விவசாயிகள் வீடுகளை ஜப்தி செய்கிறது. வங்கிகளில் விளம்பர பதாகை வைத்து விவசாயிகள் படத்தை ஒட்டி கேவலப்படுத்தவும் சட்டம் வழிவகை செய்கிறது.

அதானியின் ஊழலை வெளியிட இந்திய ரிசர்வ் வங்கியை அனுமதிக்க சட்டத்தில் இடம் இல்லை என உண்மைக்கு புறம்பாக பேசுகிறது மத்திய அரசு. அதானிக்காக அரசியல் சட்டத்தையே மூடி மறைக்க முயற்சிக்கப்படுகிறது. பிரதமர் இதனை ஏற்றுக் கொள்கிறாரா? அதானிக்கு ஒரு சட்டம், சாதாரண ஏழை விவசாயிகளுக்கு ஒரு சட்டமா? தொடர்ந்து விவசாயிகள் கோரிக்கையை ஏற்க மறுத்து விவசாயிகள் வயிற்றில் அடிக்கப்படுகிறது. இதனை கண்டித்து இந்த பிரச்சார பயணம் இந்தியா முழுவதிலும் விவசாயிகளை போராட்டத்திற்கு மீண்டும் தூண்டும் நிலையை உருவாக்கியுள்ளது. தமிழ்நாடு தவிர்த்து 11 மாநில அரசுகள் எங்கள் பின்னால் அணிவகுத்து நிற்கிறது என்பதை பிரதமர் உணர வேண்டும்’ எனத் தெரிவித்தார்.

இதன் மீதான கோரிக்கைகள் அடங்கிய கடிதம் பிரதமர் அலுவலகத்திலும் தமிழக விவசாயிகளால் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியின் நிறைவில் நெடும் பயணத்தில் பங்கு பெற்றவர்களுக்கு நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டது.

இதில், தமிழக விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழுவின் பொதுச் செயலாளர் வி.கே.விதுரைசாமி, தென்னிந்திய ஒருங்கிணைப்பாளர் ராஜ்வீந்தர் சிங் கோல்டன், ஹரியானா சாமி இந்தர், தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க மாநில தலைவர் எல் பழனியப்பன், உயர்மட்ட குழு உறுப்பினர் செல்வி சுதா, நெல்லை மண்டல தலைவர் செல்லத்துரை, பஞ்சாப் ஹாக்கம், தூத்துக்குடி அருமைராஜ் உள்ளிட்டோர் இடம் பெற்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.