போர் நிறுத்தத்தை ஏற்படுத்த சீனாவை பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளோம்: உக்ரைன் அதிபர்

கீவ்,

ஓர் ஆண்டை கடந்தும் நீண்டு வரும் உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியா உள்பட உலக நாடுகள் பலவும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால் போர் முடிவுக்கு வருவதற்கான எந்த சூழலும் தென்படவில்லை. இதனிடையே ரஷியாவின் நெருங்கிய நட்பு நாடான சீனா போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அமைதி திட்டத்தை சமீபத்தில் வெளியிட்டது. இந்த நிலையில் 3 நாள் பயணமாக கடந்த 20-ந் தேதி ரஷியா சென்ற சீன அதிபர் ஜின்பிங், நேற்று முன்தினம் மாஸ்கோவில் உள்ள அதிபர் மாளிகையில் அந்த நாட்டின் அதிபர் புதினுடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார். உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான சீனா அமைதி திட்டம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் தீவிரமாக ஆலோசனை நடத்தினர்.

அதன் பிறகு இருவரும் கூட்டாக பத்தரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது புதின், “சீன அமைதித் திட்டத்தின் பல விதிகள் உக்ரைனில் மோதலை தீர்ப்பதற்கான அடிப்படையாக எடுத்துக் கொள்ளப்படலாம். உக்ரைன் மற்றும் மேற்கத்திய நாடுகள் சமாதானத்துக்கு தயாராக இருக்கும் பட்சத்தில் சீனாவின் அமைதி திட்டம் போரை முடிவுக்கு கொண்டு வரலாம். ஆனால் உக்ரைன் மற்றும் மேற்கத்திய நாடுகளிடம் இருந்து அந்த தயார் நிலையை ரஷியா இதுவரை பார்க்கவில்லை” என கூறினார்.

இந்த நிலையில் உக்ரைன் – ரஷ்யா போரில் அமைதி ஏற்பட பேச்சுவார்த்தைக்காக சீனாவுக்கு அழைப்பு விடுத்துள்ளோம் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து ஜெலன்ஸ்கி கூறும்போது, “போர் நிறுத்தத்தை ஏற்படுத்த சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அழைப்பு விடுத்துள்ளோம். ஆனால் சீனாவிடமிருந்து இதுவரை பதில் வரவில்லை. சீனாவின் பதிலுக்காக காத்திருக்கிறோம்” என்று கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.