சட்டத்திற்கு மேலானவரா ராகுல் காந்தி.? – ஒன்றிய அமைச்சர் கேள்வி.!

சட்டத்திற்கு மேலானவராக ராகுல் காந்தி தன்னை கருதிக் கொள்வதாக ஒன்றிய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி சர்ச்சை

காங்கிரஸ்
கட்சியின் துடிப்பான தலைவர் ராகுல் காந்தியை சுற்றி எப்போதும் பரபரப்பு இருந்து கொண்டே இருக்கிறது. இந்தியாவின் ஜனநாயகத்திற்கு ஆபத்து என அவர் இங்கிலாந்தில் பேசியது பெரும் விவாதத்தை கிளப்பியது. அதைத் தொடர்ந்து ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக எம்பிக்கள் போர்க்கொடி தூக்கினர்.

அவர் இந்தியா வந்ததும் நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பேச அனுமதி மறுக்கப்பட்டது. ராகுல் காந்தியின் வீட்டிற்கு உயர் அதிகாரிகள் கொண்ட போலீஸ் குழு அனுப்பப்பட்டது. அந்தவகையில் ராகுல் காந்தியை முடக்க பாஜக நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக அரசியல் விமர்சகர்கள் கூறினர்.

சிறை தண்டனை

இந்த நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின் போது கர்நாடக மாநிலம் கோலாரில் காங்கிரஸ் கட்சிக்காக ராகுல் காந்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, ’அதெப்படி எல்லா திருடர்களும் தங்களது பெயருக்கு பின்னால் ’மோடி’ என்ற பெயரை வைத்துக் கொள்கின்றனர்?’ எனக் கேள்வி எழுப்பினார்.

அதைத் தொடர்ந்து ராகுல் காந்திக்கு எதிராக குஜராத் மாநில முன்னாள் அமைச்சர் புர்னேஷ் மோடி அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு சூரத் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட நிலையில் நேற்று (மார்ச் 23) தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் மாவட்ட நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. அதேசமயம் 30 நாட்களில் மேல்முறையீடு செய்யலாம் என்று அனுமதி வழங்கி, கூடவே ஜாமீனும் வழங்கியது.

எம்பி பதவி நீக்கம்

எந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் 2 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டால், அவர் எம்பி பதவியில் தகுதி நீக்கம் செய்ய சட்டம் உள்ளது. அதன்படி ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம் இன்று அறிவித்தது. சிறைதண்டனை ரத்து செய்யப்பட்டால் மட்டுமே ராகுல் காந்தி எம்பி பதவியில் தொடர் முடியும். இல்லை என்றால் அவர் 8 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் உருவாகும் நிலை உள்ளது.

காங்கிரஸ் போராட்டம்

சட்டத்திற்கு மேலானவரா ராகுல்.?

இந்தநிலையில் ராகுல் காந்தியும் அவரது குடும்பமும் சட்டத்திற்கு மேலானவர்களா என ஒன்றிய அமைச்சர் பூபேந்தர் யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, ‘‘சூரத் நீதிமன்றம் ராகுல் காந்தியின் பேச்சுக்கு மன்னிப்பு கோரியது. ஆனால் அவர் ஆணவத்துடன் செயல்பட்டதால் அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் போராட்டம்

காங்கிரஸ் கட்சியும், ராகுல் காந்தியும் நாட்டின் சட்டத்தை விட உயர்ந்தவர்களா? OBC சமுதாயத்தின் குடும்பப்பெயரை துஷ்பிரயோகம் செய்வதும் அவமதிப்பதும் ஒரு தேசிய தலைவரின் வேலையா?. காங்கிரஸ் கட்சியும், ராகுல் காந்தியும் தனிப்பட்ட முறையில் நாட்டிலுள்ள ஒட்டு மொத்த ஓபிசி சமூகத்தையும் துஷ்பிரயோகம் செய்த குற்றவாளிகள் என்று நான் நம்புகிறேன். நீதிமன்ற தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும்.

அப்படி ஒரு குறிப்பிட்ட சமூகத்தை நீங்கள் அவமதித்தால், அது பாரத் ஜோடோ (இந்தியாவை ஒன்றுபடுத்துங்கள்) அல்ல பாரத் டோடோ (இந்தியாவைப் பிரிக்கவும்) என்று நாங்கள் நம்புகிறோம். அவரது வார்த்தைகள் ஓபிசி சமூகம் மற்றும் பிற சிறிய சாதி சமூகங்கள் பற்றிய அவரது மனநிலையை பிரதிபலிக்கின்றன.

இந்தியில் பேசிய ஆளுநர்; வந்ததே கோபம்… மேகாலயாவில் கொந்தளித்த எம்.எல்.ஏக்கள்!

பேச்சு சுதந்திரம் என்பது ராகுல் காந்தி “யாரையும் துஷ்பிரயோகம் செய்யலாம் மற்றும் எந்த சமூகத்தையும் அவமதிக்கலாம்” என்று அர்த்தமல்ல. “ஒட்டுமொத்த சமூகத்தையும் துஷ்பிரயோகம் செய்வது பேச்சு சுதந்திரம் அல்ல, இது பேச்சு சுதந்திரத்தை தவறாக பயன்படுத்துவதாகும்’’ என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.