திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் ரத்த வங்கி மையம்

திருவள்ளூர்: திருவள்ளூர் ரோட்டரி கிளப் ஆப் ராயல்ஸின் ஆண்டறிக்கை கூட்டம், தலைவர் ஏ.இ.சதீஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் ஸ்ரீதர், பொருளாளர் எம்.துக்காராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரோட்டரி சங்கத்தின், 3231 மாவட்ட கவர்னர் ஜே.கே.என்.பழனி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். அப்போது, திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், ரோட்டரி கிளப் ஆப் ராயல்ஸ் சார்பில் பராமரிக்கப்பட்டு வரும், ரத்த வங்கியில், மாவட்டம் முழுவதும் அறுவை சிகிச்சைக்கு தேவையான ரத்தம் சேகரிக்கப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக, கடந்த ஆண்டு, அரசு மருத்துவமனையில், ரத்தம் இல்லாமல் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சென்னை அரசு மருத்துவமனையில் இருந்து, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கடந்த காலங்களில் ரத்தம் பெறப்பட்டது. தற்போது இந்நிலை மாறி, சென்னைக்கு இங்கிருந்து ரத்தம் அனுப்பி வைக்கப்படுவது பாராட்டத்தக்கது என்றார்.

அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் கம்ப்யூட்டர் பயிற்சி மையம் செயல்பட்டு வருவதும் பாராட்டத்தக்கது. இந்த நிகழ்ச்சியில், ரோட்டரி கிளப் துணை ஆளுநர் இறைமொழி, மாவட்ட செயலாளர் கோபி, ரோட்டரி கிளப் ஆப் ராயல்ஸ் உறுப்பினர்கள், விஜயநாராயணன், டாக்டர் அபர்ணா, சக்திகுமார், சுரேஷ்குமார், சரிதா, கிருஷ்ணகுமார், லட்சுமி, டாக்டர் சுமதி, மதிவாணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.