பெண்கள் பிரீமியர் லீக் இறுதிப்போட்டி : டெல்லி – மும்பை அணிகள் மோதல்

மும்பை,

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) ஐ.பி.எல். போட்டியை போலவே பெண்களுக்கான பிரீமியர் லீக் போட்டி அறிமுகம் செய்தது. முதலாவது பெண்கள் பிரீமியர் லீக் 20 ஓவர் போட்டி மும்பையில் கடந்த 4-ந் தேதி தொடங்கியது. இதில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் ஜெயின்ட்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, உ.பி. வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்றன.

ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதின. கடந்த 21-ந் தேதியுடன் லீக் ஆட்டங்கள் முடிந்தன. இதன் முடிவில் டெல்லி அணி முதல் இடத்தை பிடித்து இறுதிப் போட்டிக்கு நேரடியாக தகுதிபெற்றது. மும்பை, 2-வது இடத்தையும், உ.பி. வாரியர்ஸ் 3-வது இடத்தையும் பிடித்து ‘பிளேஆப்’ சுற்றுக்கு முன்னேறின. பெங்களூரு, குஜராத் அணிகள் முறையே 4-வது, 5-வது இடங்களை பிடித்து வெளியேறின. நேற்று எலிமினேட்டர் ஆட்டம் நடந்தது. இதில் மும்பை அணி 72 ரன் வித்தியாசத்தில் உ.பி. வாரியர்சை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

பெண்கள் பிரீமியர் லீக் போட்டியின் இறுதி ஆட்டம் நாளை (26-ந் தேதி) நடக்கிறது. மும்பை பிராபோர்ன் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இந்த போட்டியில் மேக் லேனிங் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் – ஹர்மன் பிரீத் கவூர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் சமபலம் பொருந்தியவை என்பதால் இறுதிப் போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.