பழநி பங்குனி உத்திர திருவிழா நாளை மறுதினம் கொடியேற்றம்: ஏப். 4ம் தேதி தேரோட்டம்

பழநி: பழநி மலைக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழா நாளை மறுநாள் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. திண்டுக்கல் மாவட்டம், பழநி மலைக்கோயிலில் கொண்டாடப்படும் முதன்மை திருவிழாவான பங்குனி உத்திரத்திற்கு ஈரோடு மாவட்டம், கொடுமுடியில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் தீர்த்தம் எடுத்து வந்து முருகனுக்கு அபிஷேகம் செய்வது வழக்கம்.
இந்த ஆண்டு இவ்விழா நாளை மறுநாள் (மார்ச் 29) காலை 10.45 மணிக்கு மேல் 11.45 மணிக்குள் திருஆவினன்குடி கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. விழா நடைபெறும் 10 நாட்களும் வள்ளி – தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமி வெள்ளியால் ஆன காமதேனு, ஆட்டுக்கிடா, யானை, பிடாரி மயில் மற்றும் தங்கக்குதிரை உள்ளிட்ட வாகனங்களில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.

முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் ஏப். 3ம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் மாலை 5.45 மணிக்கு மேல் 6.45 மணிக்குள் கன்யா லக்னத்தில் திருக்கல்யாணமும், இரவு 9 மணிக்கு மணக்கோலத்தில் வள்ளி – தெய்வானை சமேதரராக முத்துக்குமாரசுவாமி வெள்ளி ரதத்தில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். முத்திரை பதிக்கும் நிகழ்ச்சியான பங்குனி உத்திர தேரோட்டம் ஏப். 4ம் தேதி மாலை 4.45 மணிக்கு நடைபெறுகிறது. ஏப். 7ம் தேதி கொடி இறக்குதலுடன் விழா நிறைவடைகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.