முன்னாள் முதல்வர் எடியூரப்பா வீட்டின் மீது கல்வீச்சு: கர்நாடகாவில் பரபரப்பு

பெங்களூரு: சமீபத்தில் கர்நாடக அமைச்சரவை இடஒதுக்கீடு தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுக்கு எதிராக போராட்டம் வலுப்பெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் கர்நாடக முன்னாள் அமைச்சர் எடியூரப்பா வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கர்நாடக அமைச்சரவையில் சிறுபான்மையினருக்கான 4% இடஒதுக்கீட்டை ரத்து செய்து, அந்த 4% ஒக்கலிகா மற்றும் லிங்காயத்து சமுதாயத்தினருக்கு சமமாக பிரித்து வழங்கப்பட்டது. உள்இடஒதுக்கீடு தொடர்பான அறிவிப்பில் தற்போது போராட்டம், வன்முறை வெடித்துள்ளது. சதாசிவ கமிஷன் அளித்த அறிக்கையின் படி உள்இடஒதுக்கீட்டை செயல்படுத்த கர்நாடக அரசு முடிவு செய்தது. இந்த இடஒதுக்கீட்டால் கர்நாடகாவில் உள்ள பஞ்சாரா சமுதாயத்தினருக்கு பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

இதற்கு முன்னதாக SC/ST க்கான15 % இடஒதுக்கீட்டில் 10% வரை பஞ்சாரா மற்றும் அதனை ஒட்டிய சமூகத்தினருக்கு கிடைத்து வந்ததாகவும், ஆனால் சதாசிவ கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் செயல்படுத்தினால், தங்களுக்கு வெறும் 4% மட்டுமே இடஒதுக்கீடு கிடைக்கும். இதனால் தங்கள் சமுதாயத்தினருக்கு மிகப்பெரிய பாதிப்பு என கூறி போராட்டம் நடைபெற்று வருகிறது.

சிமோகாவில் தொடங்கிய இந்த போராட்டம் அங்கிருந்து சிகாரி எடியூரப்பா வீட்டிற்கு சென்றது. அங்கு அவரது வீட்டை முற்றுகையிட முயன்றனர். அப்போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒருகட்டத்தில் இது வன்முறையாக மாறியது. எடியூரப்பா வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.