கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தல் | மே.10 வாக்குப்பதிவு; மே.13 வாக்கு எண்ணிக்கை

புதுடெல்லி: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இன்று (மார்ச் 29) தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை அறிவித்தார்.

அதன்படி 224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக மே 10 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை மே 13 ஆம் தேதி நடைபெறும் என்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவித்தார்.

கர்நாடக தேர்தல்: சில முக்கிய தேதிகள்:

வேட்புமனு தாக்கல் தொடங்கும் நாள் ஏப் 13
வேட்புமனு தாக்கல் கடைசி நாள் ஏப் 20
வேட்புமனு பரிசீலனை ஏப் 21
வேட்புமனு வாபஸ் பெற கடைசி நாள் ஏப் 24
வாக்குப்பதிவு நடைபெறும் நாள் மே 10
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள் மே 13

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்க 9.17 லட்சம் முதன்முறை வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர். ஏப்ரல் 1 ஆம் தேதியுடன் 18 வயது பூர்த்தியானவர்கள் இத்தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கப்படுகின்றனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் அங்கு உடனடியாக தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.

இதில் ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய பிரதான கட்சிகள் தனித் தனியாக களமிறங்குகின்றன. 3 கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தை ஏற்கெனவே தொடங்கியுள்ள நிலையில், வேட்பாளர் தேர்வில் ஈடுபட்டுள்ளன. மஜத, ஆம் ஆத்மி, எஸ்டிபிஐ ஆகிய கட்சிகள் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, அவர்களை முன்னிறுத்தி பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன‌. இருப்பினும் ஆளும் பாஜகவுக்கும், எதிர்க்கட்சியான காங்கிரஸூக்கும் இடையே தான் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.