அரங்கேறிய கொடூரம்! அதிர்ச்சியில் உறைந்த சசிகலா! 

விகே சசிகலா இன்று விடுத்துள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் ரவுடிகளால் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துவரும் அராஜகங்களாலும், அட்டூழியங்களாலும் பொதுமக்கள் தாங்கிக்கொள்ள முடியாத துயரத்தை சந்தித்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக வணிகர்களின் வாழ்வாதாரமே இன்றைக்கு பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாகி இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.

நேற்றைய தினம் விழுப்புரம் மகாத்மா காந்தி சாலையில் உள்ள சூப்பர் மார்க்கெட்டிற்குள் திடீரென புகுந்த கஞ்சா போதையில் இருந்த 2 ரவுடிகள் கடையில் இருந்த ஊழியர்களிடம் மாமூல் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளனர். இந்த இரு ரவுடிகளில் ஒருவர் திமுக கட்சியின் பனியனை அணிந்து இருப்பதால் திமுகவை சேர்ந்தவர்கள் என்பது தெளிவாக தெரிகிறது. அச்சமயம் இதனை தட்டிக் கேட்ட சூப்பர் மார்க்கெட் ஊழியரான இப்ராஹீம் மீது கஞ்சா போதையில் இருந்த திமுக ரவுடிகள் சரமாரியாக தாக்குதல் நடத்தி கத்தியால் குத்தியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த இப்ராஹீம் பரிதாபமாக உயிரிழந்திருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. அதிலும் புனித ரமலான் நோன்பு இருக்கின்ற இந்த நேரத்தில் கடை ஊழியர் இப்ராஹீம் கொல்லப்பட்டு இருப்பது யாராலும் தாங்கிக் கொள்ள முடியாதது.

மேலும், இந்த இரண்டு ரவுடிகளும் மளிகை கடையில் தாக்குதல் நடத்துவதற்கு முன்னதாக பாகர்ஷா வீதியில் உள்ள எண்ணெய் கடை மற்றும் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள தங்கும் விடுதி உள்ளிட்ட இடங்களிலும் மாமூல் கேட்டு தகராறு செய்து அங்குள்ள ஊழியர்கள் மீதும் தாக்குதல் நடத்தியது விழுப்புரம் மக்கள் அனைவரது கண்முன்னே பட்டப்பகலில் நடைபெற்றுள்ளது. ஆனால் இதைப்பற்றியெல்லாம் ஏதும் அறியாதவராக தமிழக முதல்வர் முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் சட்டப்பேரவையில் தற்போது ஒரு விளக்கத்தை அளித்து இருக்கிறார். அதாவது இந்த சம்பவம் நடந்ததற்கு குடும்ப பிரச்சனையால் ஏற்பட்ட தகராறு தான் காரணமாம். இதைத்தான் அனைவரும் நம்ப வேண்டுமாம். எனவே, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு இந்த லட்சணத்தில் இருந்தால், பொதுமக்களின் உயிருக்கு யார் பாதுகாப்பு அளிப்பது என்று தெரியவில்லை? அதிலும் கடை ஊழியர் இப்ராஹீம் தாக்கப்பட்டுள்ள மளிகை கடைக்கு 12 மீட்டர் தொலைவில் தான் தாலுகா காவல்நிலையமும் அமைந்துள்ளது. அதில் சுமார் 80 காவலர்கள் வரை பணியில் இருந்துள்ளனர். ஆனால் இந்த அராஜகத்தை தடுக்க ஒருவர் கூட வராமல் வேடிக்கை பார்த்த அவலமும் நிகழ்ந்துள்ளது. எனவே இனியும் திமுகவினர் தங்களை சிறுபான்மையினரின் பாதுகாவலன் என்று சொல்லி யாரையும் ஏமாற்ற வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சிக்காலத்தில், தமிழ்நாட்டில் ரவுடியிசம் என்ற பேச்சுக்கே இடம் அளிக்காதவாறு சட்டம் ஒழுங்கு பேணிப் பாதுகாக்கப்பட்டது. தமிழகமும் அமைதி பூங்காவாக திகழ்ந்தது. ஆனால், இன்றோ தமிழ்நாட்டில் ரவுடியிசத்தை கட்டுப்படுத்தமுடியாமல் ஆட்சியாளர்கள் திணறி வருவதால், பொதுமக்களுக்கு குறிப்பாக வணிகர்கள் மத்தியில் மிகவும் அச்சத்தை ஏற்படுத்தி, பாதுகாப்பற்ற சூழல் நிலவுவது மிகவும் வேதனை அளிக்கிறது.

விழுப்புரத்தில் உயிரிழந்த கடை ஊழியர் இப்ராஹீம் அவர்களின் கும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.

திமுக தலைமையிலான அரசு தமிழ்நாட்டை அச்சுறுத்திவரும் கஞ்சா போதை கலாச்சாரத்தை உடனே தடுத்து நிறுத்திட உறுதியான, நிரந்தரமான நடவடிக்கையை எடுக்க வேண்டும். மேலும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து எடுக்க வேண்டும். இதன் மூலம் தமிழ்நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.”

இவ்வாறு அந்த அறிக்கையில் சசிகலா தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.