கரூர்: கரூரில் அண்ணன் வந்த பள்ளி வேனில் சிக்கி ஒன்றரை வயது தம்பி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தாந்தோணிமலை போலீஸார் வழக்கு பதிவு செய்து வேன் ஓட்டுநர் முருகேசனை (35) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் கருப்பகவுண்டன்புதூர் அருகேயுள்ள திருப்பதி நகரை சேர்ந்தவர் சரவணன் (42). பெங்களூருவில் உள்ள ஐடி (தகவல் தொழில்நுட்ப) நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். தற்போது வீட்டிலிருந்தே (வொர்க் ப்ரம் ஹோம்) பணியாற்றி வருகிறார். இவர் மனைவி மோகனா. இவர்களுக்கு சாய் ஆதவ் (3). ஒன்றரை வயது சாய் மிதுன் என இரு மகன்கள் உள்ளனர்..
சாய் ஆதவ் கரூரில் உள்ள தனியார் பள்ளியில் ப்ரீகேஜி படித்து வருகிறார். இன்று (மார்ச் 30) மதியம் பள்ளி வேனில் வந்த சாய் ஆதவ்வை அழைத்து வருவதற்காக வீட்டு கேட்டை திறந்து வேனில் இருந்து சாய் ஆதவை அழைத்து வந்துள்ளார். அதே நேரத்தில் வீட்டிலிருந்து வெளியே ஓடி வந்த சாய் மிதுன் பள்ளி வேனில் அடிப்பட்டு தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தாந்தோணிமலை போலீஸார் வழக்கு பதிவு செய்து வேன் ஓட்டுநர் முருகேசனை (35) கைது செய்து, சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கரூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை செய்யப்பட்டு சிறுவனின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.