கலைஞர் கொண்டு வந்த காவேரி – குண்டாறு இணைப்பு திட்டம்: பணிகள் மும்முரம்!

தமிழ்நாடு சட்டப் பேரவையில் இன்று (ஏப்ரல் 1) காவிரி- தெற்கு வெள்ளாறு – வைகை – குண்டாறு இணைப்புத் திட்டம் தொடர்பாக அதிமுக சார்பில் கவன தீர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதற்கு அமைச்சர் துரை முருகன் பதிலளித்து பேசினார்.

சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்!

காவிரி- தெற்கு வெள்ளாறு – வைகை – குண்டாறு இணைப்பு திட்டம் திமுக ஆட்சியில் தொய்வடைந்துள்ளது, என எதிர் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், கே.பி. முனுசாமி உள்ளிட்டோர் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தனர். இத்திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் என விஜயபாஸ்கர் வலியுறுத்தி பேசினார்.

கொண்டு வந்த திட்டம்!

இதற்கு அவை முன்னவரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் பதில் அளித்தார். அப்போது பேசிய அவர், “காவிரி- தெற்கு வெள்ளாறு – வைகை – குண்டாறு இணைப்புத் திட்டத்தை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்ததைப் போல் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார். அவர் மட்டுமே இந்தத் திட்டத்தை செய்யவில்லை. காவிரி – குண்டாறு இணைப்பு குறித்து சிந்தித்தவர் கலைஞர் தான். அதற்காக முதன்முதலில் கதவணை கட்ட நிதி ஒதுக்கியவர் கலைஞர். அந்த கதவணையைக் கட்டியது நான் தான். 2008ஆம் ஆண்டு கலைஞர் அதற்கான ஆணையைப் பிறப்பித்தார். 2009 ஆம் ஆண்டு பணி தொடங்கப்பட்டது.

நிலம் எடுக்கும் பணிகள் மும்முரம்!

அதிமுக ஆட்சியில் 2020ஆம் ஆண்டு நில எடுப்பு பணிக்கு ரூ.600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் ரூ.34 கோடி தான் செலவு செய்யப்பட்டது. 71 ஏக்கர் நிலம் தான் எடுக்கப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 2 ஆண்டுகளில் நில எடுப்பு பணிக்கு ரூ.300 கோடியை திமுக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. 690 ஏக்கர் நிலங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

64 சதவீத கால்வாய் வெட்டும் பணி நிறைவு!

தற்போது ரூ.554 கோடி நிதி நில எடுப்பு பணிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் கால்வாய் வெட்டும் பணி நடைபெறவில்லை. திமுக ஆட்சியில் ரூ.177 கோடி கால்வாய் வெட்டும் பணிக்கு செலவு செய்யப்பட்டுள்ளது. 64 சதவீத கால்வாய் வெட்டும் பணி நிறைவு பெற்றுள்ளது. திமுக ஆட்சியில் காவிரி – குண்டாறு இணைப்பு நடந்தே தீரும்” என்று கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.