தாவர பூஞ்சைத் தொற்றால் பாதிக்கப்பட்ட பூஞ்சை ஆராய்ச்சியாளர்..!!

உலகம் முழுவதும் கொரோனா தொற்றை தொடர்ந்து பல்வேறு வகையான கொடிய தொற்று நோய்கள் தீவிரமாக பரவி அச்சுறுத்தி வருகின்றன. குறிப்பாக எபோலா, எச்3என்2 இன்ஃப்ளூயன்ஸா, பறவை காய்ச்சல், மங்கிபாக்ஸ், கறுப்பு பூஞ்சை என பலவிதமான தொற்று பரவல் கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், தற்போது புதிய வகை தொற்று பாதிப்பு ஒன்று உலகிலேயே முதல் முறையாக இந்தியர் ஒருவருக்கு ஏற்பட்டுள்ளது. Plant Fungus எனப்படும் தாவரப் பூஞ்சை தொற்று மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த நபருக்கு ஏற்பட்டுள்ளது. Chondrostereum purpureum என்ற பூஞ்சை பொதுவாக தாவரங்களை தாக்கி பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால், முதல்முறையாக கொல்கத்தாவைச் சேர்ந்த 61 வயது நபருக்கு ஏற்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட அந்த நபர் mycologist எனப்படும் பூஞ்சை ஆராய்ச்சியாளர் ஆவார். இவருக்கு கடந்த மூன்று மாதமாக திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. தொண்டையில் கரகரப்பு, இருமல், விழுங்குவதில் சிரமம், உடற்சோர்வு போன்றவற்றால் இவர் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சென்று பரிசோதித்துள்ளார். அவருக்கு இதற்கு முன்னர் நீரிழிவு நோய், எச்ஐவி, நாள்பட்ட வியாதிகள், போதை பழக்கம் போன்ற எந்த பிரச்னையும் இருந்ததில்லை. முதலில் அவரது மார்பு பகுதியை எக்ஸ்ரே எடுத்து பார்த்தனர். அதில் எந்த பாதிப்பும் தெரியவில்லை. பின்னர் சிடி ஸ்கேன் எடுத்த போது தான் கழுத்து பகுதியில் பூஞ்சை தொற்று பாதிப்பு இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, பாதிப்பில் இருந்து மீண்டுள்ளார் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த தொற்று மிகவும் தீவிரத்தன்மை கொண்டது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தவாரங்களை தாக்கும் கிருமிகள் மனிதர்கள், விலங்குகளுக்கு நோய் பாதிப்பை ஏற்படுத்துவது புதியது. இது பெரும் சவாலை தந்துள்ளதாக மருத்துவ நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். பலவீனமான நோய் எதிர்ப்பு தன்மை கொண்டவர்கள்தான் இதுபோன்ற தொற்று பரவலால் பெரிதும் அச்சுறுத்தலுக்கு உள்ளாவதாக மருத்துவ உலகம் தெரிவிக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.