விழுப்புரம் பனை தொழிலாளர்கள் கள்ளச்சாராயம் வழக்கில் கைது; சீமான் கொந்தளிப்பு..!

விழுப்புரம் மாவட்டம் எக்கியார்குப்பத்தில் கடந்த வாரம் கள்ளச்சாராயம் குடித்து 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் மாநிலத்தை உலுக்கியது. இதுகுறித்து காவல்துறை அளித்த விளக்கத்தில், உயிரிழந்தவர் குடித்தது கள்ளச்சாயாம் கிடையாது; அது மெத்தனால் கலந்த விஷ சாராயம் என்று தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க காவல்துறை கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், விழுப்புரம் பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்பனை நடந்து வருவதாக குற்றசாட்டுகள் எழ தொடங்கின. அதன்படி, நேற்றைய தினம் (மே 25) விழுப்புரம் ரயில் சந்திப்பு வெளியே அமர்ந்து இருவர் கள்ளச்சாராயம் குடிக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் விழுப்புரம் பகுதியில் உள்ள பனை தொழிலாளர்கள் மீது கள்ளச்சாராயம் வழக்கு போட்டு காவல்துறை கைது செய்திருப்பதாக நாம் தமிழர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.

சீமான் பதிவிட்டுள்ள ட்வீட்
; விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பகுதியைச் சேர்ந்த பனைத் தொழிலாளர்கள் மீது கள்ளச்சாரயம் காய்ச்சுவதாகப் பொய் வழக்குப் புனையப்பட்டு, தமிழ்நாடு அரசினால் கைது செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியதாகும். உடனடியாகப் பனைத் தொழிலாளர்களை விடுவிக்குமாறு தமிழ்நாடு அரசினை வலியுறுத்துகிறேன்.

விழுப்புரம் மாவட்டம் பூரிகுடிசை கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ்பாபு மற்றும் ஜெபராஜ் ஆகியோரை இன்றும், செஞ்சி பகுதியை சேர்ந்த பழனி என்பவர் கடந்த வாரமும் காவல் துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அரசு தொடர்ந்து பனைத் தொழிலாளர்களின் நலனுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. இதனை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்.

உண்மையாக கள்ளச்சாராயம் காய்ச்சுவோரைத் தடுக்கவோ, டாஸ்மாக் சாராய வியாபாரத்தை நிறுத்தவோ வக்கற்ற தமிழ்நாடு அரசு, பனையேறிகளை மிரட்டிக் கைது நடவடிக்கைகளில் ஈடுபடுவதனை ஒருபோதும் ஏற்க முடியாது. இந்நிலை மேலும் தொடர்ந்தால் நாம் தமிழர் கட்சி இதற்கெதிரானப் போராட்டங்களைக் கடுமையாக மேற்கொள்ளும் என்று தெரிவித்துக்கொள்கிறேன் என வலியுறுத்தியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.