ராஜஸ்தான் அரசியலில் என்ன நடக்கிறது? 4 மணி நேர டெல்லி டீலிங்… முடிவுக்கு வருமா கெலாட் vs பைலட் சண்டை!

ராஜஸ்தான் அரசியலை பொறுத்தவரை தேசிய கட்சிகளின் ஆதிக்கம் அதிகமாக நிறைந்து காணப்படுகிறது. குறிப்பாக 1993க்கு பின்னர் காங்கிரஸ், பாஜக என இரண்டு கட்சிகள் மட்டுமே மாறி மாறி ஆட்சி கட்டிலில் அமர்ந்துள்ளன. கடந்த 2013ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் வசுந்தரா ராஜே தலைமையிலான பாஜக (163 இடங்கள்) வெற்றி பெற்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது. அப்போது காங்கிரஸ் பெற்றிருந்த இடங்களின் எண்ணிக்கை 21 மட்டுமே (மொத்த இடங்கள் 200).

ராஜஸ்தான் அரசியல்

இந்த சூழலில் 2014ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக சச்சின் பைலட் நியமிக்கப்படுகிறார். இவர் ராகுல் காந்திக்கு நெருக்கமான நட்பு வட்டத்தில் இருப்பவர். இந்நிலையில் மாநிலம் தழுவிய அளவில் காங்கிரஸ் கட்சிக்குள் எழுச்சியை ஏற்படுத்த சச்சின் பைலட் தீவிரம் காட்டினார். பேரணி, பொதுக்கூட்டங்கள், தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வேலைகள், கட்சி நிர்வாகிகளை பிரதிநிதித்துவப் படுத்தல், இளம் தலைவர்களை உருவாக்கியது என பல்வேறு வேலைகளில் ஈடுபடுகிறார்.

காங்கிரஸ் வெற்றி

கிட்டதட்ட ராஜஸ்தான் காங்கிரஸில் இள ரத்தம் பாய்ச்சப்பட்டதை போல தொண்டர்கள் உணர்ந்தனர். இதன் விளைவாக களப்பணியில் தீவிரம் காட்டி 2018ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி 100க்கும் மேற்பட்ட இடங்களில் வென்று ஆட்சியை கைப்பற்றியது. இதையடுத்து முதலமைச்சர் நாற்காலி ஏற்கனவே இருமுறை அந்த பதவியை வகித்த மூத்த தலைவர் அசோக் கெலாட்டிற்கு வழங்கப்படுகிறது. ஆனால் தேர்தல் வெற்றிக்காக பெரிதும் உழைத்த சச்சின் பைலட் தனக்கு முதலமைச்சர் பதவி கிடைக்காததால் பெரிதும் ஏமாற்றம் அடைந்தார்.

சச்சின் பைலட் அதிருப்தி

இங்கிருந்தே மோதல் போக்கு தொடங்கி விட்டது. குஜ்ஜார் சமூகத்தை சேர்ந்த சச்சின் பைலட்டிற்கு 20க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தனிப்பட்ட செல்வாக்கு உண்டு. இருப்பினும் கட்சி தலைமை எடுத்த முடிவு அந்த சமூக மக்களிடையே அதிருப்தியை உண்டாக்கியது. இரண்டு ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியில் பூசல்கள் வெடித்து வந்த சூழலில் 2020ஆம் ஆண்டு உச்சக்கட்டத்தை எட்டியது. முதலமைச்சர் அசோக் கெலாட்டிற்கு எதிராக சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கினர்.

ஆளும் அரசு மீது பகீர்

இதன் முக்கிய காரணம், முந்தைய பாஜக அரசின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் பலவற்றின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது தான். இதை முன்வைத்து தான் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது என்று கூட சொல்லலாம். இதனால் ராஜஸ்தான் காங்கிரஸ் இரண்டு கோஷ்டிகளாக பிரிந்து செயல்படுவது வெளிப்படையாகவே தெரிய ஆரம்பித்தது. எம்.எல்.ஏக்கள் பிளவால் ஆட்சி கவிழுமோ என்ற அச்சம் ஏற்பட்டது. இத்தகைய சர்ச்சையை முடிவுக்கு கொண்டு வர காங்கிரஸ் தலைமை பல்வேறு வியூகங்களை கையாண்டிருக்க வேண்டும்.

உட்கட்சி பூசல்

ஆனால் இதில் கோட்டை விட்டு விட்டதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இதற்கிடையில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவருக்கான தேர்தல் வந்தது. அதில் அசோக் கெலாட் தான் போட்டியிட வேண்டும் என்று சோனியா காந்தியே விரும்பினார். ஆனாலும் ராஜஸ்தான் மாநில முதலமைச்சராக கெலாட் நீடிக்க வேண்டும். சச்சின் பைலட் வரக் கூடாது என்று எம்.எல்.ஏக்கள் பலரும் தெரிவித்தனர். ஒருவேளை கெலாட்டிற்கு தேசிய பொறுப்பு வழங்கியிருந்தால் ராஜஸ்தானில் சர்ச்சை சற்று ஓய்ந்திருக்கலாம்.

தேசிய தலைவர்களின் ஆதிக்கம்

ஆனால் அரசியல் களம் அப்படியான வாய்ப்பை ஏற்படுத்தி தரவில்லை. தொடர்ந்து உட்கட்சி பூசல் என்பது தொடர் கதையாகி வருகிறது. இந்த இடத்தில் காங்கிரஸ் தலைமையின் செயல்பாடுகளை சுட்டிக் காட்டியே ஆக வேண்டும். மாநில அளவில் காங்கிரஸ் தலைவர்களின் செயல்பாடுகளில் எப்போதும் தேசிய தலைவர்களின் ஆதிக்கம் இருந்து வந்துள்ளது.

காங்கிரஸ் கட்சிக்கு பாதிப்புகள்

இது களத்தில் என்ன நடக்கிறது என்பதை சரியாக புரிந்து கொள்ள முடியாத சூழலை பலமுறை உருவாக்கியிருக்கிறது. கோஷ்டி பூசலுக்கு வழிவகுத்தல், பிற கட்சிகளுக்கு தாவும் நிலை போன்றவற்றுக்கு சிவப்பு கம்பளம் விரித்து கொடுக்கும் நிலைக்கு ஆளாக்கி இருக்கிறது. தனது சொந்த கட்சியின் ஆட்சிக்கு எதிராக சச்சின் பைலட் கையிலெடுத்த விஷயங்கள் என்று பார்த்தால் பெரிய லிஸ்டே போடலாம்.

டெல்லியில் பேச்சுவார்த்தை

நடப்பாண்டு இறுதியில் ராஜஸ்தான் மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சச்சின் பைலட்டின் செயல்பாடுகள் கட்சி மேலிடத்திலும், மக்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மீண்டும் ஆட்சியை பிடிக்க முடியுமா? என்ற சந்தேகத்தை வலுப்படுத்தி வருகிறது. இந்நிலையில் தான் நேற்று அசோக் கெலாட், சச்சின் பைலட் ஆகிய இருவரையும் நேரில் அழைத்து 4 மணி நேரம் கட்சி மேலிடம் டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இதில் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, கேசி வேணுகோபால் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கேசி வேணுகோபால் உறுதி

அதன்பிறகு ட்விட்டரில் பதிவிட்டுள்ள கேசி வேணுகோபால், வரும் 2023 சட்டமன்ற தேர்தலில் ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி ஒற்றுமையுடன் செயல்படும். மாறி மாறி ஆட்சி நடந்து வரும் சூழலுக்கு முற்றுப்புள்ளி வைத்து காங்கிரஸ் அமோக வெற்றி பெறும் எனக் குறிப்பிட்டிருந்தார். சச்சின் பைலட்டை சமாதானப்படுத்த காங்கிரஸ் மேலிடம் இரண்டு விஷயங்களை கையாளக்கூடும் என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கர்நாடகா மாடல்

ஒன்று, காங்கிரஸ் செயற்குழு உறுப்பினராக நியமிப்பது. இரண்டாவது, காங்கிரஸ் கட்சியின் ராஜஸ்தான் மாநிலத் தலைவராக நியமிப்பது. சமீபத்தில் நடந்த கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் சித்தராமையா, டிகே சிவக்குமார் ஆகிய இருவரும் ஒன்றிணைந்து செயல்பட்டதால் தான் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தி தர முடிந்தது. இதை முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டு ராஜஸ்தானில் அசோக் கெலாட், சச்சின் பைலட் செயல்படுவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.