பாராளுமன்ற செயலாளர் நாயகம் பதவிக்கு நியமிக்கப்பட்ட குஷானீ ரோஹணதீரவை இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் நேரில் சந்தித்து வாழ்த்து

பாராளுமன்றத்தின் புதிய செயலாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ள திருமதி குஷானீ ரோஹணதீர அவர்களைச் சந்தித்த இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங், புதிய நியமனம் தொடர்பில் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

பாராளுமன்ற செயலாளர் நாயகத்தை நேற்று (03) பாராளுமன்றத்தில் சந்தித்த அமெரிக்கத் தூதுவர், பாராளுமன்றத்துடன் தொடர்ந்தும் ஒத்துழைப்புடன் பணியாற்ற விரும்புவதாகத் தெரிவித்ததுடன், நிறுவனத்தைப் பலப்படுத்துவதற்கு எப்பொழுதும் பாராளுமன்றம் தமது உதவியை நம்பலாம் என்றும் உறுதியளித்தார்.

பாராளுமன்றத்தின் வகிபாகம் விஸ்தரிக்கப்பட்டிருப்பதாகவும், பல்வேறு குழுக்கள் செயற்படுவதாகவும் நட்பு ரீதியாக நடைபெற்ற இச்சந்திப்பில் செயலாளர் நாயகம் குஷானீ ரோஹணதீர சுட்டிக்காட்டினார். ஆட்சிமுறையில் இளைஞர்களை ஈடுபடுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும், பாலின சமத்துவம் மற்றும் வலுப்படுத்தல் தொடர்பான சட்டமூலம் மற்றும் பெண்களுக்கான தேசிய ஆணைக்குழுவை அமைப்பதற்கான பிரேரணை என்பன சம்பந்தப்பட்ட பங்குதார்களுடன் இணைந்து தயாரிக்கப்பட்டு வருவதாகவும் செயலாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

திருமதி.ரோஹணதீரவின் இந்த நியமனம் பல்வேறு இளைஞர் யுவதிகளுக்கு உத்வேகம் அளிப்பதாக அமைந்துள்ளது என்றும் அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் குறிப்பிட்டார். ஒருவருக்கொருவர் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதன் முக்கியத்துவம் மற்றும் சாத்தியமான ஒத்துழைப்புக்கள் குறித்தும் இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.