இந்திய அணி மிஸ் செய்யும் இந்த 3 வீரர்கள்… கோப்பையும் கைவிட்டு போக அதிக வாய்ப்பு!

India vs West Indies 2023: இந்திய கிரிக்கெட் அணி, மேற்கு இந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அந்த அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஜூலை 12ம் தேதி தொடங்குகிறது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், முதல் போட்டி டொமினிகாவில் உள்ள வின்ட்சர் பூங்கா மைதானத்தில் நடைபெறும். ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, இந்த மேற்கு இந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தில் மூன்று வீரர்கள் கடுமையாக மிஸ் செய்வார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி, ஜூலை 12 முதல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதன் பிறகு, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஜூலை 27ஆம் தேதி முதல் தொடங்குகிறது. தொடரின் முதல் இரண்டு ஒருநாள் போட்டிகள் பார்படாஸிலும், கடைசி ஒருநாள் போட்டி ஆக. 1ஆம் தேதி டிரினிடாட்டிலும் நடைபெறவுள்ளது. பின்னர் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஆக. 3ஆம் தேதி முதல் ஆக. 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த முழு தொடரிலும் இந்திய அணியில் 3 வீரர்கள் விளையாட முடியாது. அவர்கள் குறித்து இதில் காணலாம்.

ரிஷப் பண்ட்

இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் இந்த தொடரில் பங்கேற்க மாட்டார். ஏனெனில், கடந்தாண்டு டிசம்பரில் கார் விபத்தில் சிக்கி, அவர் பலத்த காயம் அடைந்தார். இதன் காரணமாக பண்டுக்கு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் குணமடைந்து வருகிறார். அவர் எப்போது களம் திரும்புவார் என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை. பண்ட் இந்திய அணிக்கு மிகவும் பயனளிக்கும் வீரர்களில் ஒருவர். ஆனால் தற்போது அவர் களத்தில் இறங்குவது சாத்தியமில்லை.

ஷ்ரேயாஸ் ஐயர்

இந்திய அணியில் 4ஆவது இடத்தில் இருக்கும் மிகப்பெரிய போட்டியாளராக கருதப்படும் ஷ்ரேயாஸ் ஐயரும் தற்போது காயத்தால் போராடி வருகிறார். ஆசிய கோப்பை தொடருக்குள் அவர் களம் திரும்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், ஷ்ரேயாஸ் ஐயர் இந்த மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரிலும் இடம்பெறவில்லை. 28 வயதான ஷ்ரேயாஸ், கடந்த மார்ச் மாதம் அகமதாபாத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தான் கடைசியாக விளையாடினார். ஷ்ரேயாஸ் ஐயர் இதுவரை 10 டெஸ்ட், 42 ஒருநாள் மற்றும் 49 டி20 சர்வதேச போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். 

ஷிகர் தவான்

இந்தியாவின் அனுபவமிக்க தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவானும் இந்த முழுத் தொடரிலும் எந்த வடிவ போட்டியிலும் விளையாடவில்லை. மேலே குறிப்பிட்ட மற்ற இருவர் போல் இல்லாமல், இவர் முழு உடற்தகுதியுடன் இருக்கிறார். அவரை டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் இருந்து விலக்கி வைத்துள்ளது, பிசிசிஐ. டி20 அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை, ஆனால் அதில் தவான் தேர்வு செய்வது மிகவும் கடினம். 37 வயதான தவானின் கிரிக்கெட் வாழ்க்கை இப்போது கடைசி கட்டத்தில் பரிசீலிக்கப்படுகிறது. அவர் நீண்ட காலமாக ODI வடிவத்தில் மட்டுமே விளையாடி வருகிறார் என்பது நினைவுக்கூரத்தக்கது. 

வரும் அக்டோபர் – நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெற உள்ள 50 ஓவர் உலகக்கோப்பை தொடரிலும் இவர்கள் பங்கேற்பது சந்தேகம் தான். ரிஷப் பண்டின் உடல்நிலை சற்று முன்னேறி வந்தாலும், அவரின் ஆட்டத்திறனை மீண்டும் நிரூபிப்பது என்பது இந்த குறுகிய கால இடைவெளியில் சற்று கடினமானது தான். அதேபோல், ஷ்ரேயஸ் ஐயர் ஆசிய கோப்பை தொடரில் விளையாட வாய்ப்புள்ளது என கூறப்பட்டாலும், 4ஆவது வீரராக விளையாடும் சூர்யகுமார் யாதவ் நன்றாக தனது திறனை வெளிப்படுத்தினால், இவரின் வாய்ப்பு கேள்விகுறியாகவும் வாய்ப்புள்ளது. அதேபோல், பும்ரா இந்திய அணியில் எப்போது இணைவார் என்ற கேள்வியையும் ரசிகர்கள் தொடர்ந்து எழுப்பி வருகின்றனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.