வந்தே பாரத் எக்ஸ்பிரஸில் தீ… போபால் டூ டெல்லி ரயில் பயணிகள் ஷாக்… எப்படி நடந்தது?

இந்தியாவின் முதல் செமி ஸ்பீடு பயணிகள் ரயில் என்றால் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் தான். சொகுசு அனுபவம், விரைவான பயணம் வேண்டுமெனில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சரியான தேர்வாக இருக்கும் எனப் பலரும் கூறி வருகின்றனர். இதில் பாதுகாப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே தரப்பு தெரிவித்திருந்தது.

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் தீவிபத்து

இந்நிலையில் போபால் டூ டெல்லி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இன்று காலை போபாலில் இருந்து புறப்பட்ட ரயில் மத்தியப் பிரதேச மாநிலத்தின் குர்வாய் கெதோரா ரயில் நிலையம் அருகே சென்ற போது சி-12 பெட்டியில் விபத்து நடந்தது. இதில் யாருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை.

பேட்டரி பாக்ஸ்

அனைத்து பயணிகளும் பத்திரமாக வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் காலை 6.45 மணிக்கு நடந்ததாக சொல்லப்படுகிறது. இதுதொடர்பாக ரயில்வே நிர்வாகம் தரப்பு கூறுகையில், பெட்டி ஒன்றில் இருந்த பேட்டரியில் திடீரென தீப்பற்றி கொண்டது. இது பெரும்புகை உடன் கிளம்ப பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

எலக்ட்ரிகல் சேஃப்டி சிஸ்டம்

உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டது. விரைவாக தீ அணைக்கப்பட்டது. பேட்டரி பாக்ஸை தாண்டி தீ வேறெங்கும் பரவவில்லை என்பது ஆறுதல் அளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது. பேட்டரி பாக்ஸில் தீ பற்றிய உடன் எலக்ட்ரிகல் சேஃப்டி சிஸ்டம் அதை தனிமைப்படுத்தி விட்டது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

பயணிகள் தப்பினர்

பின்னர் தீயால் பாதிக்கப்பட்ட பேட்டரி நீக்கப்பட்டது. இதையடுத்து ரயில் முழுவதும் பரிசோதனை செய்யப்பட்டது. இதற்கிடையில் விபத்து நடந்த பெட்டியில் இருந்த பயணிகள் அனைவரும் வேறு பெட்டிக்கு மாற்றப்பட்டனர். மொத்தம் 20 முதல் 22 பயணிகள் இருந்ததாக தெரிகிறது. இதுதொடர்பாக விபத்து நடந்த ரயிலில் பயணித்த பெண் பயணி ஒருவர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இன்று காலை பரபரப்பு

அதில், இன்று காலை போபால் டூ டெல்லி வந்தே பாரத் ரயிலில் தீ பற்றி கொண்டது. நான் அதில் தான் இருந்தேன். கடவுள் அருளால் எங்களுக்கு எதுவும் ஆகவில்லை. அனைவரும் நலமுடன் இருக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார். காலை 8 மணியளவில் பிரச்சினை ஏதும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட உடன் ரயில் மீண்டும் புறப்பட்டு சென்றது.

மொத்தம் 25 ரயில்கள்

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீவிபத்து நிகழ்ந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 25 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதில் முதல் தீவிபத்து இதுவே என்பது கவனிக்கத்தக்கது. இனி இதுபோல் விபத்து நடைபெறாமல் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.