பந்துவீசும் ரோஹித்… அப்ப இவருக்கு கிடைக்கப்போகுது வாய்ப்பு – சிக்ஸர் மழைக்கு ரெடியா?

ICC World Cup 2023, Rohit Sharma: ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டி உள்ளது. ஆப்கானிஸ்தான் இங்கிலாந்தை வீழ்த்தியது, நெதர்லாந்து நேற்று தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியிருக்கிறது. இதன்மூலம், அனைத்து அணிகளுக்கும் அரையிறுதி வாய்ப்பு என்பது பிரகாசமாகி உள்ளது.

இன்று ஷாக் உண்டா…?

இது ஒருபுறம் இருக்க தற்போது அனைத்து போட்டிகளும் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெறும் நியூசிலாந்து – ஆப்கானிஸ்தான் (NZ vs AFG) போட்டி பெரும் எதிர்பார்ப்பை பெற்றிருக்கிறது. சுழலுக்கு சாதகமான சேப்பாக்கத்தில் ஆப்கானிஸ்தானின் நபி, ரஷித், முஜீப் உர் ரஹ்மான் உள்ளிட்டோர் நியூசிலாந்து அணியை நெருக்கடிக்கு உள்ளாக்கலாம். அந்த வகையில், நியூசிலாந்தை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் மீண்டும் ஓர் அதிர்ச்சி வெற்றியை பெறுமா என்று அனைவரும் காத்திருக்கின்றனர். 

இந்நிலையில்தான், இந்தியா – வங்கதேசத்திற்கு (IND vs NED) எதிரான போட்டியும் முக்கியத்துவம் பெறுகிறது. போட்டி புனே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. வழக்கம்போல், செம்மன் ஆடுகளம் என்பதால் பேட்டிங்கிற்கே கூடுதல் சாதகமாக இருக்கும். சுழலுக்கும் கைக்கொடுக்கும் என்றாலும், பவுன்ஸ் சற்று இருக்கும். இந்திய அணி தற்போது ரோஹித் – சுப்மான், விராட் – ஷ்ரேயாஸ் – கே.எல். ராகுல், குல்தீப் – ஜடேஜா, ஹர்திக் பாண்டியா – சிராஜ் – பும்ரா என்ற காம்பினேஷனில் விளையாடுகிறது.

எதுக்குப்பா அந்த ஷர்துல் தாக்கூர்?

8ஆவது இடத்தில் மட்டும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் (சென்னை) அஸ்வினும், ஆப்கன், பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிகளில் (முறையே டெல்லி, அகமதாபாத்) ஷர்துல் தாக்கூரும் விளையாடினர். இதில் ஷர்துல் தாக்கூரை அணியில் எடுத்தது பெரும் கேள்விக்கு உள்ளாகி வருகிறது. பந்துவீச்சில் அவரை முழுமையாக நம்பாத இந்திய அணி ஒரு 25- 40 ரன்களை அடிப்பதற்காக 8ஆவது இடத்தில் அவரை விளையாடுவது சரியாக இல்லை என குற்றச்சாட்டு வந்தது.

இருப்பினும், வங்கதேசத்திற்கு எதிரான போட்டியை இந்தியா சாதரணமாக எடுத்துக்கொள்ளாது. நிச்சயம், எவ்வித பரிசோதனை முயற்சியிலும் ஈடுபடாது. அந்த வகையில், ஷர்துல் தாக்கூரை (Shardul Thakur) அணியில் இருந்து தூக்கினால் அங்கு அஸ்வின் வருவாரே தவிர கூடுதல் பேட்டரோ அல்லது ஷமியோ வரப்போவதில்லை என்பதில் விடாப்பிடியாக உள்ளனர். 

பந்துவீசி பயிற்சி…

இருப்பினும், புனேவில் வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ள ரோஹித் சர்மா (Rohit Sharma) நேற்று பந்துவீசி பயிற்சி எடுத்துள்ளார். எத்தனை ஓவர்கள் வீசினார் என்பது தெரியவில்லை என்றாலும் அவர் தொடர்ந்து பந்துவீசும் புகைப்படங்களை காண முடிகிறது. அந்த வகையில், அவர் போட்டியிலும் பந்துவீச வாய்ப்புள்ளதாக கணிப்புகள் தெரிவிக்கின்றன. முன்பிருந்த அவர்கள் இதுகுறித்து பேசி வந்தாலும் அதற்கான வாய்ப்பு குறைவு என்று பலரும் கூறி வந்தனர்.

Captain Rohit Sharma bowling in nets……!!!!!! pic.twitter.com/RMM0N7lq8h

— Johns. (@CricCrazyJohns) October 17, 2023

உள்ளே வரும் சூர்யகுமார்

ஆனால், ரோஹித் இப்போது பந்துவீசி பயிற்சி மேற்கொள்வது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஏனென்றால், அவருக்கு ஏற்கெனவே தோள்பட்டையில் காயம் ஏற்பட்டிருந்தது. அதன்பின் அவர் பெரிதாக பந்துவீசவில்லை. தற்போது அவர் அணியில் பந்துவீசுவார் எனில் சூர்யகுமாரை (Suryakumar Yadav), ஷர்துல் இடத்தில் களமிறக்க வாய்ப்புள்ளது என்றும் கணிக்கப்படுகிறது.

5 பௌலர்கள்

ஆம், ஷர்துல் கழட்டிவிடப்பட்டு சூர்யகுமார் உள்ளே வந்தால் இந்திய அணிக்கு ஐந்து பந்துவீச்சாளர்களே இருப்பார்கள். அவர்கள் அனைவரும் 10 ஓவர்கள் வீச வேண்டி வரும். சிராஜ், குல்தீப், பும்ரா, ஜடேஜா ஆகியோர் தலா 10 ஓவர்கள் வீசிவிடுவார்கள் என்றாலும் ஹர்திக் 10 ஓவர்களை வீசுவது சற்று கடினம்தான். இருப்பினும், அந்த இடத்தில் ரோஹித் 2-4 ஓவர்களை வீசினால் ஹர்திக் மீதம் இருக்கும் ஓவர்களை வீசி கணக்கை முடித்துக்கொள்ளலாம். 

பேட்டிங்கிலும் சூர்யகுமார் ஹர்திக் பாண்டியாவுக்கு பின் இறங்கலாம், ஜடேஜா 8ஆவது இடத்தில் இறங்கலாம் என்றும் கருத்துகள் கூறப்படுகின்றன. எனவே, நாளைய போட்டியில் பலரும் இதை எதிர்பார்க்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.