வங்கதேசத்தை வறுத்தெடுக்குமா இந்தியா… சர்ச்சையில் 8வது இடம் – யார் பக்கம் சாய்வார் ரோஹித்?

ICC World Cup 2023, IND vs BAN: நடப்பு உலகக் கோப்பை தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து அணிகள் முறையே இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா என்ற பெரிய அணிகளை வீழ்த்தி, சுவாரஸ்யத்தை அதிகப்படுத்தி உள்ளது.

இந்தியா – வங்கதேசம்

அரையிறுதிக்கு தகுதிபெறும் அணிகள் குறித்து அறுதியிட்டு சொல்ல முடியாத ஒரு நிலையே தற்போது உள்ளது. இந்திய, நியூசிலாந்து அணிகள் தற்போது வரை தோல்வியடையாவிட்டாலும் நிலைமை எப்படி வேண்டுமென்றாலும், எந்த நேரத்தில் மாறும் என்பதே தெரியாது.

அந்த வகையில், இந்தியா – வங்கதேச போட்டியிலும் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. வங்கதேச அணியில் ஷகிப் அல் ஹாசன், மெஹடி ஹாசன் மிராஸ் போன்ற தரமான சுழற்பந்துவீச்சாளர்களும், ஷோரிபுல் இஸ்லாம், முஸ்தபிசுர் ரஹ்மான் போன்ற இடதுகை வேகப்பந்துவீச்சாளர்களும் உள்ளனர். இது இந்திய அணியின் ரோஹித் சர்மா, கில், விராட், ஷ்ரேயாஸ் ஆகியோருக்கு நெருக்கடியாக இருக்கும். எனவே, இந்திய பேட்டர்கள் அவர்களை எதிர்கொள்வதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

மேலும், லிட்டன் தாஸ், ஷகிப் உல் ஹாசன், மொஹமத்துல்லா, முஷ்பிகுர் ரஹீம், முஸ்தபிசுர் ரஹ்மான் போன்றோர் இந்திய சூழலுக்கு அதிகம் பழக்கமானவர்கள் என்பதை நாம் கவனித்தாக வேண்டும். அவர்கள் இந்திய சுழலை நன்றாக ஆடினால், இந்திய அணிக்கு நெருக்கடி வரலாம்.

சர்ச்சைக்குரிய 8ஆவது இடம்? 

புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் ரன்கள் குவியும் என எதிர்பார்க்கலாம். அதாவது, கடந்த இரண்டு ஆண்டுகளாக அங்கு ஒருநாள் போட்டிகள் நடைபெறவில்லை என்றாலும் எப்போதும் செம்மண் மைதானம் பேட்டிங்கிற்கே சாதகமாக இருந்துள்ளது. சுழல் பந்துவீச்சாளர்களுக்கும் ஆடுகளம் உதவும் என்பதால் நாளைய போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் அதாவது சர்ச்சையான 8ஆவது இடத்தில் அஸ்வினை இறக்கப்போகிறதா இல்லை ஷர்துலையே தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

இந்தியா கடைசியாக 2021ஆம் ஆண்டு கொரேனா தொற்று காலகட்டத்தில் மூன்று ஒருநாள் போட்டிகளையும் இங்கிலாந்துக்கு எதிராக இந்த மைதானத்தில்தான் விளையாடியது. அதில் 2-1 என்ற கணக்கில் இந்தியா வென்றிருந்தாலும், அதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் ஷர்துல் தாக்கூர் அந்த தொடரில் மொத்தும் 7 விக்கெட்டுகளை (3 போட்டிகளை) வீழ்த்தியிருந்தார். 

ஷர்துலா… அஸ்வினா…

பந்து பவுண்ஸ் ஆகவும் இங்கு வாய்ப்பிருப்பதால் ஷர்துல் தாக்கூருக்கே செல்லலாம் எனவும் வல்லுநர்கள் கூறுகின்றனர். ஆனால், அஸ்வினை எடுத்தால் இடதுகை பேட்டர்கள் அதிகமிருக்கும் வங்கதேச பேட்டர்களை ஆரம்பித்திலேயே சுருட்ட முடியும் எனவும் கூறுகின்றனர். மேலும், நாளைய போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் எடுப்பதே அணிகளுக்கு சாதகமாக இருக்கும். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.