தவெக: “என் கனவில் பாதி பலித்துவிட்டது; மீதிக்கு உழைக்க வேண்டும்"- விஜய்க்கு எஸ்.ஜே.சூர்யா வாழ்த்து!

தமிழக அரசியலில் தடம் பதித்து, பெரும் வெற்றியைப் பதிவு செய்துள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு திரையுலகினர் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த 2023-ம் ஆண்டு வெளியான ‘வாரிசு’ திரைப்படத்தில் விஜய்யும், எஸ்.ஜே.சூர்யாவும் இணைந்து நடித்திருந்தனர். அந்தப் படப்பிடிப்பின் போது விஜய்யிடம் தான் கூறிய ஒரு ரகசியத்தை இப்போது எஸ்.ஜே.சூர்யா வெளிப்படுத்தியுள்ளார். எஸ்.ஜே.சூர்யா பதிவில், “விஜய் சார், வாரிசு படப்பிடிப்பின் போது நான் உங்களிடம் ஒன்று சொன்னேன்.

‘தமிழ்நாடு அரசின் சிறந்த நடிகருக்கான விருதை உங்கள் கையால் வாங்க வேண்டும்’ என்பதுதான் என் ஆசை என்றேன். இன்று அதில் பாதி நிஜமாகிவிட்டது. இனி நான் கடுமையாக உழைத்து சிறந்த நடிகன் என்பதை நிரூபித்து, உங்கள் கையால் அந்த விருதைப் பெறுவேன் நண்பா!. இப்போது நான் மிகவும் குஷியாக இருக்கிறேன்” எனப் பதிவிட்டிருக்கிறார்.

விஜய்யின் அரசியல் வெற்றிக்கு ரஜினிகாந்த், சூர்யா, சிவகார்த்திகேயன் எனப் பல நட்சத்திரங்கள் வாழ்த்து மழையை பொழிந்து வரும் வேளையில், எஸ்.ஜே.சூர்யாவின் இந்த வாழ்த்து தனித்துத் தெரிகிறது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.