விராட் கோலி சதமடிக்க அம்பயர் உதவினாரா? வைடு பால் கொடுக்காதது ஏன்? – இதோ ஐசிசி விதி

வங்கதேசம் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி அதிரடியாக விளையாடி சதமடித்து இந்திய அணிக்கு வெற்றியை தேடித் தந்தார். அவர் சதமடிக்க வேண்டும் என்பதற்காக கடைசி 26 ரன்களில் கே.எல் ராகுல் ஸ்டிரைக் எடுக்கவே இல்லை. விராட் கோலியே பெரும்பாலான பந்துகளை சந்தித்து, சிக்சர்களும் பவுண்டரிகளுமாக அடித்து சதமடித்தார். விராட் கோலி சதமடிக்க முயற்சித்திருக்காவிட்டால் இந்திய அணி 2 ஓவர்களுக்கு முன்பே வெற்றி பெற்றிருக்க முடியும். ஆனால், பவுண்டரி அடித்து சதத்தை எட்ட வேண்டும் என்பதற்காக ஒரு ரன், இரண்டு ரன்கள் எடுக்க வேண்டியதை கூட களத்தில் இருந்த விராட் கோலியும், கே.எல்.ராகுலும் எடுக்கவில்லை. 

ஸ்டிரைக்கில் இருந்த விராட் கோலி பவுண்டரி அடிக்க எடுத்த முயற்சி ஒரு சில பந்துகளில் கைகொடுக்கவில்லை. அப்போது வங்கதேச அணியின் பந்துவீச்சாளர் திடீரென வைடு வீச, கள நடுவராக இருந்த கெட்டில்பரோ அந்த பந்துக்கு வைடு கொடுக்கவில்லை. இதனால் விராட் கோலி சதமடிக்க வேண்டும் என்பதற்காக களநடுவராக இருந்த கெட்டில்பரோ உதவினாரா? என்ற சர்ச்சை இப்போது பெரும் விவாத பொருளாக மாறியிருக்கிறது. வைடு வீசப்பட்டபோது இந்திய அணியின் வெற்றிக்கு இரண்டு ரன்களும், விராட் கோலியின் சதத்துக்கு மூன்று ரன்களும் தேவையாக இருந்தது.

அப்போது விராட் கோலிக்கு லெக்சைடில் பந்து செல்ல, எல்லோரும் வைடு என களநடுவர் கெட்டில்பரோ அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதனை அவர் செய்யவில்லை. இது பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது. களநடுவர் கெட்டில்பரோவும் நடுநிலையாக செயல்படாமல் விராட் கோலி சதமடிக்க வேண்டும் என்பதற்காக தன்னுடைய பணியை முறையாக செய்யாமல் ஒருசார்பாக செய்திருப்பதாக விமர்சனம் எழுந்திருக்கிறது. ஆனால் ஐசிசி விதிமுறைப்படியே அவர் நடந்து கொண்டது இப்போது தெரியவந்திருக்கிறது.   

ஐசிசியின் வைடு பந்து விதிமுறை சொல்வது என்ன?

வைடு பால் குறித்து கடந்த ஆண்டு ஐசிசி வெளியிட்ட புதிய விதிமுறைகளின்படி, பந்துவீச்சாளர் பந்துவீசும்போது பேட்ஸ்மேன் ஓர் இடத்தில் இருந்து, பந்தை எதிர்கொள்ளும்போது நகர்ந்துவிட்டால், அந்த பந்து கீப்பரிடம் தஞ்சமடையும்பட்சத்தில் அந்த பந்து வைடா இல்லையா என்பதை கள நடுவர் தான் முடிவு செய்ய வேண்டும். ஒருவேளை பேட்ஸ்மேன் அப்படியே நின்றிருந்தால் பந்து அவரது காலில் பட்டிருக்கும் என்று அம்பயர் கருதினால் அந்த பந்துக்கு வைடு கொடுக்காமலும் இருக்கலாம். இதனையே தான் இந்தியா – வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான போட்டியில் விராட் கோலி பேட்டிங் செய்யும்போது களநடுவர் கெட்டில்பரோ செய்திருக்கிறார்.

விராட்கோலி பந்து வரும்போது நின்ற இடத்தில் இருந்து அதாவது லெக் ஸ்டம்புக்கு வெளியே இருந்து, ஸ்டம்புக்கு நேராக நகர்ந்துவிட்டார். அவர் அங்கேயே நின்றிருந்தால் அந்த பந்து லெக் ஸ்டம்புக்கு வெளியே செல்லாமல் விராட் கோலியின் காலில் பட்டிருக்கும் என்பதால் அம்பயர் வைடு கொடுக்கவில்லை.  இதனால் களநடுவர் கெட்டில் பரோ விராட் கோலி சதமடிக்க வேண்டும் என்பதற்காக ஒரு சார்பாக நடந்து கொள்ளவில்லை என ஐசிசி விதிமுறை மூலம் தெரியவருகிறது. ஒருவேளை நடுவர் வைடு கொடுத்திருந்தால் கூட, இந்திய அணிக்கு ஒரு ரன் வெற்றிக்கு தேவைப்பட்டிருக்கும். அடுத்த பந்தில் சிக்சர் அல்லது பவுண்டரி அடித்து இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வதுடன், விராட் கோலி தன்னுடைய 48வது சதத்தையும் பூர்த்தி செய்திருப்பார். 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.