இந்திய வீரர்களுக்கு பிசிசிஐ தடை… பயிற்சியாளர்களுக்கு மட்டும் அனுமதி – என்ன விஷயம்?

Indian Team Dharamshala Trekking: 2011ஆம் ஆண்டுக்கு பின் ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தொடர் (ICC World Cup 2023) இந்தியாவில் இம்முறை நடைபெற்று வருகிறது. 2011ஆம் ஆண்டுக்கு முன் போட்டியை நடத்தும் நாடு, உலகக் கோப்பையை வென்றதே இல்லை என்பதுதான் வரலாறாக இருந்தது. ஆனால், 2011இல் தோனி தலைமையிலான இந்திய அணி அந்த வரலாற்றை மாற்றியது.

அசைக்க முடியாத இந்திய அணி

தொடர்ந்து, அதன்பின் 2015இல் போட்டியை நடத்திய ஆஸ்திரேலியாவும், 2019இல் போட்டியை நடத்திய இங்கிலாந்தும் கோப்பையை வென்றன. இதனால், இந்த முறை உலகக் கோப்பை இந்தியாவே வெல்லும் என பலராலும் கணிக்கப்பட்டுள்ளது. அதற்கு வலுசேர்க்கும் வகையில், இந்திய அணி (Team India) ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து என வரிசையாக ஐந்து அணிகளை வீழ்த்தி தோல்வியே தழுவாமல் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. 

ஓப்பனிங், மிடில் ஆர்டர், பினிஷிங் என பேட்டிங்கில் மட்டுமின்றி அனைத்து போட்டிகளிலும் பந்துவீச்சிலும் சிறப்பாக விளையாடி உள்ளது எனலாம். 5 போட்டிகளிலும் இந்திய அணி சேஸிங்தான் செய்துள்ளது, அதில் எதிரணியின் 50 விக்கெட்டுகளை 46 விக்கெட்டுகளை இந்திய பந்துவீச்சாளர்கள் கைப்பற்றி உள்ளனர். இதில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து ஆகிய அணிகள் ஆல்-அவுட்டாக்கி உள்ளது. 

இந்த நிலையில், தற்போது இந்திய அணி சிறிது ஓய்வில் உள்ளது எனலாம். கடந்த 22ஆம் தேதி இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தியது. இதையடுத்து, இந்திய அணிக்கு வரும் 29ஆம் தேதிதான் இங்கிலாந்து அணியுடன் லக்னோவில் போட்டி உள்ளது. நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு இந்தியாவுக்கு 7 நாள்கள் இடைவேளை உள்ளது.

பிசிசிஐ விதித்த தடை

இந்த இடைவேளையில் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்றோர் ஓய்வெடுப்பதற்காகவும், தங்கள் குடும்பத்துடன் நேரம் செலவழிக்கவும் இந்திய அணியின் முகாமில் இருந்து தற்காலிகமாக வெளியேறி உள்ளனர். குறிப்பாக, மற்ற வீரர்கள் தரம்சாலாவிலேயே இரண்டு நாள்கள் ஓய்வெடுக்கவும் அனுமதி அளிக்கப்பட்டது. லக்னோவில் இந்திய அணி பயிற்சிக்காக ஒன்றுக் கூடும் என தெரிகிறது. 

அந்த வகையில், ராகுல் டிராவிட் (Rahul Dravid) மற்றும் மற்ற பயிற்சியாளர் குழு உறுப்பினர்கள் அனைவரும் தரம்சாலாவில் மலையேற்றத்தில் ஈடுபட்ட வீடியோவை பிசிசிஐ (BCCI) இன்று வெளியிட்டுள்ளது. இங்கு மலையேற்றம் செய்யவும், பாராகிளைடிங் போன்ற சாகசங்களை செய்ய இந்திய வீரர்களுக்கு பிசிசிஐ தடைவிதித்திருந்தது. எனவே, மலையேற்றத்தில் பயிற்சியாளர்கள் குழுவினர் மட்டுமே பங்கேற்றனர், இந்திய வீரர்கள் யாரும் இடம்பெறவில்லை. இந்த திரியுண்ட் மலைத்தொடர் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 2875 மீட்டர் உயரத்தில் உள்ளது. 

A day off for the squad is a day well spent in the hills for the support staff

Dharamsala done

 Taking some positive vibes to Lucknow next #TeamIndia | #CWC23 | #MenInBlue | #INDvENG pic.twitter.com/g0drFKacT4

— BCCI (@BCCI) October 25, 2023

குஷி மோடில் ராகுல் டிராவிட் 

பிசிசிஐ வெளியிட்ட இந்த வீடியோவில் ராகுல் டிராவிட் பேசியதாவது,”திரியுண்டு மவை மேல் இருந்து பார்த்தால் அருமையான காட்சி. இது ஒரு சவாலான மலையேற்றம், நான் அதை ஒப்புக்கொள்ள வேண்டும். நீங்கள் இங்கு வந்தவுடன், இங்கு பார்க்கும் காட்சிகள் உங்களை கண்கவர்ந்து, வியப்படைய வைக்கும். 
பயிற்சியாளர்கள் குழுவுடன் (Support Staff) இங்கு வருவது நம்பமுடியாதது. இது ஒரு சிறந்த நாள் கூட. துரதிர்ஷ்டவசமாக, வீரர்களை இங்கு அழைத்து வர முடியவில்லை. இந்த பாறைகளில் நடப்பது சற்று ஆபத்தானதும் கூட. ஆனால் நம்பிக்கையுடன், அவர்கள் விளையாடாத ஒரு நாள் (எந்தப் போட்டியும்), வீரர்கள் இங்கு வந்து இதை அனுபவிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.