இந்தியாவின் முதல் இடத்திற்கு அடுத்தடுத்து வரும் ஆப்பு… உலகக் கோப்பையில் ட்விஸ்ட்!

Indian Cricket Team: ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை (ICC World Cup 2023) கடந்த அக். 5ஆம் தேதி தொடங்கி, 20 நாள்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. சென்னை, பெங்களூரு, கொல்கத்தா, டெல்லி, மும்பை என இந்தியாவின் 10 நகரங்களில் தொடர் நடைபெற்று வருகிறது. 

புள்ளிப்பட்டியல்

இங்கிலாந்து – இலங்கை அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்று வரும் நிலையில், அனைத்து அணிகளும் தலா 5 போட்டிகளை விளையாடிவிட்டன. இதில், இந்தியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் புள்ளிப்பட்டியலில் (Points Table) முறையே முதல் நான்கு இடங்களில் உள்ளன. 

இந்த நான்கு அணிகளுடன் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஆகியவைதான் அரையிறுதிக்கான ரேஸில் இருக்கும் என கூறப்பட்டது. இதில், இங்கிலாந்து அணி நான்கு போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் மட்டுமே வென்றுள்ளது, அதுவும் வங்கதேச அணியுடன்தான். நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா அணிகளுடன் இங்கிலாந்து தோல்வியடைந்துவிட்டது. மறுபுறம் பாகிஸ்தான் அணியும் இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் உடன் தோல்வியைடந்துள்ளது.

அரையிறுதி ரேஸில் யார் யார்?

இதனால், இப்போது முதல் நான்கு இடத்தில் இருக்கும் அணிகள்தான் அரையிறுதிக்கு வரும் என கூறப்படுகிறது. காட்சிகள் மாறினாலும், புள்ளிப்பட்டியலின் நான்காவது இடத்திற்கு மட்டுமே ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகளுக்கு இடையே போட்டி இருக்கும் என தெரிகிறது. மேலும், அனைத்து அணிகளுக்கும் இன்னும் நான்கு போட்டிகளே மீதம் உள்ளது. 

அந்த வகையில், தற்போது இந்திய அணியின் (Team India) முதல் இடத்தை பிடிக்க நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகியவை குறிபார்த்துள்ளது எனலாம். ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து ஆகிய அணிகளை வீழ்த்தி உள்ளது. கடந்த 22ஆம் தேதி அந்த அணி நியூசிலாந்துடன் மோதியது. வரும் 29ஆம் தேதிதான் இந்திய அணிக்கு இங்கிலாந்து உடன் போட்டி இருக்கிறது. ஆனால், அதற்குள் இந்திய அணியை முதலிடத்தில் இருந்து கீழே இறங்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் நிலை?

சென்னை சேப்பாக்கத்தில் நாளை தென்னாப்பிரிக்கா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதில் இந்திய அணியை விட அதிக நெட் ரன்ரேட்டில் இருக்கும் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றால், இந்திய அணி இரண்டாம் இடத்திற்கு கீழ் இறங்கிவிடும். மேலும் நாளை மறுநாள் (அக். 28) ஆஸ்திரேலியா – நியூசிலாந்து அணிகள் தரம்சாலாவில் மோதுகின்றன. இதில் ஒருவேளை நியூசிலாந்து ஜெயித்தால் இந்தியா மூன்றாவது இடத்திற்கு செல்ல நேரிடும். இருப்பினும், அடுத்த நாளே (அக். 29) இந்தியாவுக்கு (IND vs ENG) போட்டியிருப்பதால் அதில் வெற்றி பெறும்பட்சத்தில் இந்தியா மீண்டும் முதலிடும் பிடிக்கும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.