இங்கிலாந்தில் உள்ள இரட்டை சகோதரிகள் தங்களின் 100வது பிறந்தநாளைக் கொண்டாடிய நிகழ்வு தற்போது வைரலாகி வருகிறது.
இங்கிலாந்தின் தெற்கு யார்க்ஷயர் நகரத்தில் வசித்து வரும் ஆனி பிரௌன் மற்றும் புளோரன்ஸ் பாய்காட் இருவரும் இரட்டை சகோதரிகள். இவர்கள் சமீபத்தில் தங்களது 100-வது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளனர்.
தி ஃபிர்ஸ் குடியிருப்பு இல்லத்தில் நடைபெற்ற கொண்டாட்டத்தில், ஐந்து தலைமுறையினர் சூழ குடும்பத்தினர் நண்பர்கள் என அனைவரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பழைய நினைவுகளை அசைபோட்ட பிரௌன், “எங்களது அப்பாவால் கூட எங்களிடையே உள்ள வித்தியாசத்தைக் கண்டுபிடிக்க இயலவில்லை. அவர் இந்த விஷயத்தில் நம்பிக்கையற்றவராக இருந்தார்.
நாங்கள் மிகவும் நெருக்கமாக எப்போதும் ஒன்றாகவே இருந்தோம், ஒருவர் இல்லாமல் மற்றவர் இருந்தது இல்லை. எனக்கு 50 வயதாகும் போது எப்படி இருந்ததோ அப்படியே இப்போதும் உணர்கிறேன். எந்த வித்தியாசமும் தெரியவில்லை.
தொடங்கிய செயலை தொடர்ந்து செய்து கொண்டே இருங்கள், சீக்கிரமாகவே உறங்கச் சென்று விடுங்கள்… இதுவே நீண்ட ஆயுளுக்கான ரகசியம் என்று நான் நினைக்கிறேன். நாங்கள் ஊர்ந்து கொண்டே பல ஆண்டுகளைக் கடந்து வருகிறோம். இப்போது நூறுக்கு வந்திருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.

புளோரன்ஸ் பாய்காட்டின் மகள் கேத்தி லிண்ட்சே கூறுகையில், “ஐந்து மகன்கள் மற்றும் ஐந்து மகன்கள் பிறந்த குடும்பத்தில், இவர்கள் இரட்டையர்கள். அவர்கள் இளமையாக இருந்தபோது முற்றிலும் ஒரே மாதிரியாக இருந்தார்கள். அவர்களது குரலும் ஒருபோலவே இருக்கும்’’ என்று கூறியுள்ளார்.
100 வயது என்பது வெறும் வயது மட்டுமல்ல. அது வாழ்வில் அவர்கள் பெற்ற கோடி அனுபவங்களும் கூட.
அனுபவத்திற்கு வயது 200… வாழ்த்துவோம்!