மத்தியப் பிரதேசம்: திருமணத்திற்கு மறுத்த தாய்; 11 வயது மகனைக் கொன்று டிரம்மில் மறைத்த நபர் கைது

மத்தியப் பிரதேச மாநிலம் சத்னா என்ற இடத்தைச் சேர்ந்தவர் ஆஷா. இவரது கணவர் நாசிக்கில் வேலை செய்து வந்தார். ஆஷா வீட்டு வேலை செய்து வந்தார்.

ஆஷாவைக் கடந்த சில ஆண்டுகளாக அதே ஊரைச் சேர்ந்த மதுரா(45) என்பவர் ஒருதலையாகக் காதலித்து வந்தார். அதோடு தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டுக்கொண்டார். ஆனால் அதற்கு ஆஷா மறுப்பு தெரிவித்து வந்தார்.

ஆஷாவின் 11 வயது மகன் வீட்டில் தனியாக இருந்தான். அந்நேரம் வீட்டிற்கு வந்த மதுரா தனியாக இருந்த சிவாஜி(11) என்ற சிறுவனை கழுத்தை அறுத்து கொலை செய்து அங்கிருந்த நீல கலர் டிரம்மில் வைத்து அதன் மீது துணியைப் போட்டு மூடி வைத்துவிட்டு சென்றுவிட்டார்.

வெளியில் சென்று இருந்த சிவாஜியின் சகோதரி சஜல் பிற்பகலில் வீட்டிற்கு வந்தபோது வீடு பூட்டி இருந்தது. ஜன்னல் வழியாக உள்ளே பார்த்தபோது மின் விசிறியும், விளக்கும் எரிந்து கொண்டிருந்தது.

கொல்லப்பட்ட சிறுவன்
கொல்லப்பட்ட சிறுவன்

சிவாஜியையும் காணவில்லை. இதையடுத்து இது குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸார் விரைந்து வந்து கதவைத் திறந்து உள்ளே தேடிப் பார்த்தபோது டிரம்மில் சிறுவன் சிவாஜி உடல் இருந்தது. அதிலேயே கொலைக்குப் பயன்படுத்திய கத்தியும் இருந்தது.

இது குறித்து சகோதரி சஜல் கூறுகையில், ”மதுரா பல ஆண்டுகளாக எனது அம்மாவிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூடி வந்தார். ஆனால் எனது அம்மா அதற்கு சம்மதிக்கவில்லை. இதற்கு தக்கவிலை கொடுக்க வேண்டி வரும் என்று மதுரா மிரட்டி இருந்தார்” என்று தெரிவித்தார்.

இது குறித்து போலீஸார் கூறுகையில், ”கொலை நடப்பதற்கு முன்பு ஆஷாவிற்கும், மதுராவிற்கும் இடையே வாக்குவாதம் நடந்துள்ளது. ஆஷா வேலை செய்த கடைக்குச் சென்று மதுரா வாக்குவாதம் செய்துள்ளார்.

அங்கிருந்த கடை உரிமையாளர் எச்சரித்து அனுப்பி வைத்தார். அதன் பிறகுதான் நேராக வீட்டிற்குச் சென்று அங்கு தனியாக இருந்த சிவாஜியை மதுரா கொலை செய்துள்ளார்” என்று தெரிவித்தனர்.

கொலை செய்துவிட்டு தலைமறைவான மதுராவைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அவனது போன் ஆப் செய்யப்பட்டு இருந்தது. ஆனாலும் போலீஸார் தேடிக் கண்டுபிடித்து அவனைக் கைது செய்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.