சென்னை: மத்திய அரசின் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மற்றும் தொகுதி மறுவரையறை கொள்கைகளுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த தனித் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேறியுள்ளன.
தனித்தீர்மானத்தை தாக்கல் செய்து முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “நாட்டையும், நாட்டு மக்களையும் பதற்றத்தில் வைக்கும் இரண்டு முக்கியமான பிரச்சினைகள் குறித்து இந்த மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியே ஆக வேண்டிய நெருக்கடியான அரசியல் சூழ்நிலை நமக்கு ஏற்பட்டுள்ளது. ஒன்று… ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற மிக மோசமான எதேச்சதிகார திட்டம். இதனை நாம் கடுமையாக எதிர்த்தாக வேண்டும். இரண்டு… மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரால் தமிழ்நாட்டின் மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை குறைக்க நினைக்கும் சதி. இதனை முறையடிக்க வேண்டும். இந்த இரண்டு திட்டங்களும் மக்களாட்சியை குலைக்கும் செயல் என்பதால், இவற்றுக்கு எதிராக நாம் அனைவரும் ஒருசேர குரல் கொடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஒன்றிய அரசை வலியுறுத்தும் இந்த தீர்மானத்தை இந்த சட்டப்பேரவை ஒருமனதாக நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.” இவ்வாறு பேசினார்.
தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் கொண்டுவந்த தனித் தீர்மானங்கள் குறித்த விவாதங்கள் நடைபெற்றது. அப்போது அதிமுக, கொ.ம.தே.க., தவாக, விசிக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் போன்ற கட்சிகள் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்தன. மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானத்துக்கு ஆதரவாக பேசிய கொ.ம.தே.க. எம்.எல்.ஏ. ஈஸ்வரன், “வடக்கே பல மாநிலங்களில் 7 கட்டங்களாக தேர்தல் நடத்துகிறீர்கள். நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் எப்படி சாத்தியமாகும்?. நாங்கள் சந்தேகப்படுவது சரிதானே…” என்றார்.
அதேபோல், தமிழக வாழ்வுரிமைக் கட்சி எம்.எல்.ஏ. வேல்முருகன் பேசுகையில், “மாநில மக்களின் உரிமையைக் குழிதோண்டிப் புதைக்கும் செயல் இது” என்றார். மேலும், “மத்திய அரசின் தொகுதி மறுவரையறை குறித்த தீர்மானத்தின் மீதான கவலையை, அக்கறையை தமிழக பாஜக புரிந்துகொள்கிறது” என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். “முதல்வர் கொண்டுவந்த 2 தீர்மானங்களையும் மனிதநேய மக்கள் கட்சி வரவேற்கிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்தை அழிப்பதாக உள்ளது” என்றார் எம்எல்ஏ ஜவாஹிருல்லா. உறுப்பினர்களின் விவாதங்களை தொடர்ந்து மத்திய அரசின் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மற்றும் தொகுதி மறுவரையறை கொள்கைகளுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த தனித் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.