தமிழுக்கு வருகிறார் 'குண்டூர் காரம்' ஸ்ரீலீலா

தெலுங்குத் திரையுலகத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ஸ்ரீலீலா. குறுகிய காலத்தில் பிரபலமானாலும் அவரது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்கள் அமையவில்லை. அவரது நடனத்திற்காகவே படங்களில் வாய்ப்பு கொடுக்கிறார்கள் என்ற பேச்சும் உள்ளது. பொங்கலுக்கு மகேஷ் பாபு ஜோடியாக அவர் நடித்து வெளிவந்த 'குண்டூர் காரம்' படத்தில் ஸ்ரீலீலா நடனமாடிய காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலானது. கன்னடத்தில் அறிமுகமாகி தெலுங்கில் பிரபலமான ஸ்ரீலீலா, எம்பிபிஎஸ் படித்து வருகிறார்.

நேற்று குடும்பத்தினருடன் திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளார். அப்போது அவரது அடுத்த படங்கள் பற்றி பத்திரிகையாளர்கள் கேள்விகளை எழுப்பினர். தெலுங்கு, தமிழில் சில புதிய படங்களில் நடிக்க உள்ளதாகவும், அவற்றைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்கள் வெளியிடுவார்கள் என்றும் கூறினார்.

தெலுங்கில் பிரபலமாகி தமிழுக்கு வந்து இங்கு பிரபலமான கதாநாயகிகளின் வரிசையில் ஸ்ரீலீலாவும் இடம் பெறுவாரா ?. முதல் அறிவிப்பும், படமும் வெளியாகட்டும், அதுவரை காத்திருக்க வேண்டும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.