சென்னை: கோடைகாலம் முழுவதும் ரயில் நிலையங்களில் சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகம் உட்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கோடை வெயில் வாட்டி வருகிறது. வரும்நாட்களில் வெப்பநிலை அதிகரிக்கும், வெப்ப அலை வீசும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதை கருத்தில் கொண்டு,இதன்படி, அனைத்து ரயில் நிலையங்களிலும் சுத்தமான குடிநீரைவழங்குவதற்கான முயற்சிகளை தெற்கு ரயில்வே தீவிரப்படுத்தியுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
பயணிகள் அதிகம் வந்து செல்லும் முக்கியமான ரயில் நிலையங்களுக்கு டேங்கர் லாரிகள் மூலம்குடிநீர் விநியோகம் செய்வது குறித்து ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களின் அனைத்து நடைமேடைகளிலும் தண்ணீர் இருப்பை உறுதி செய்ய வழக்கமான சோதனைகளை மேற்கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீரான குடிநீர் இருப்பை உறுதி செய்யவும், குடிநீர் தொடர்பாக எழும் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காணவும் ரயில்வே ஊழியர்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பதற்கான முறையை அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதவிர, பயணிகளுக்கு ரயில் நீர் கிடைப்பதையும் ரயில்வே உறுதி செய்துள்ளது.
கடந்த நிதி ஆண்டின் கடைசி காலாண்டில் (ஜனவரி முதல் மார்ச் வரை) பயணிகளின் நலனுக்காக ரயில் நிலையங்களில் 59 லட்சத்துக்கும் மேற்பட்ட ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில்களை ரயில்வே வழங்கியுள்ளது.630-க்கும் மேற்பட்ட பாசஞ்சர், மெயில், விரைவு ரயில்களில் 40 லட்சத்துக்கும் அதிகமான ஒருலிட்டர் பாட்டில்கள் வழங்கப்பட் டுள்ளன. கோடை காலம் முழுவதும் ரயில் நிலையங்களில் சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.