மிகவும் சரியானவராக இருந்ததால் விவாகரத்து செய்தேன்; பிரபல கால்பந்து வீரரின் முன்னாள் மனைவி கூறிய காரணம்

பிரேசிலா,

பிரேசிலை சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் ரிக்கார்டோ இசேக்சன் டோஸ் சாண்டோஸ் லெய்டே. இவரை காகா என்று ரசிகர்கள் அழைக்கின்றனர். 2002ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற பிரேசில் கால்பந்து அணியில் காகா இடம்பெற்றிருந்தார். 2006ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரிலும் இவர் இடம்பெற்றிருந்தார். அதன்பின்னர் 2017ம் ஆண்டு காகா கால்பந்தில் இருந்து ஓய்வு பெற்றார்.

இதனிடையே, காகா தனது சிறுவயது தோழியும், காதலியுமான கரோலின் சிலிகோவை கடந்த 2005ம் ஆண்டு திருமணம் செய்தார். 10 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த நிலையில் கடந்த 2015ம் ஆண்டு இருவரும் பிரிவதாக இந்த தம்பதி அறிவித்தனர்.

விவாகரத்து பெற்றபின் காகா கடந்த 2019ம் ஆண்டு பிரேசில் மாடல் அழகி கரோலினா டையாஸ் என்பவரை திருமணம் செய்தார். அதேபோல், கரோலின் சிலிகோ கடந்த 2021ம் ஆண்டு இடூர்டொ ஸ்கார்பா ஜூலியோ என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில், காகா மிகவும் சரியானவராக இருந்ததால் விவாகரத்து செய்ததாக முன்னாள் மனைவி கரோலின் சிலிகோ தெரிவித்துள்ளார்.

தனது முன்னாள் கணவர் காகா மற்றும் விவாகரத்து குறித்து கரோலின் சிலிகோ கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், காகா எனக்கு ஒருபோதும் துரோகம் செய்யவில்லை. அவர் என்னை அன்பாக கவனித்துக்கொண்டார், அவர் எனக்கு சிறந்த குடும்பத்தை அளித்தார். ஆனால், எனக்கு மகிழ்ச்சியில்லை. ஏதோ ஒரு குறை இருந்தது. பிரச்சினை என்னவென்றால் எனக்கு காகா மிகவும் சரியானவராக இருந்தார். அதனால் விவாகரத்து செய்தேன்’ என்றார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.