மீனாட்சி அம்மன் சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம்-லட்சக்கணக்கான மக்கள் வருகையால் விழாக்கோலமான மதுரை!

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். அதிலும் சித்திரை மாதத்தில் நடைபெறும் திருவிழா மிக உற்சாகமாக நடைபெறும்.

கடந்த 12 -ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய சித்திரைத் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் அம்மனும் சுவாமியும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு மாசி வீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.

திருக்கல்யாணம்

விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான 8-ஆம் நாளில் மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நேற்று முன்தினமும், 9-ஆம் நாள் நிகழ்வாக நேற்றிரவு இரவு திக் விஜயமும் நடைபெற்று முடிவடைந்தது.

இந்நிலையில் சித்திரை திருவிழாவின் 10-ம் நாள் நிகழ்வான விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தை முன்னிட்டு சுவாமியும் அம்மனும் இன்று அதிகாலை மண்டகப்படிகளில் எழுந்தருளிய பின்னர் நான்கு சித்திரை வீதிகள் சுற்றி வலம் வந்தனர். அப்போது திருக்கல்யாண மேடையில் ஓதுவார்களால் பன்னிரு திருமுறைகள் ஓதப்பட்டது.

இதையடுத்து முத்துராமய்யர் மண்டபத்தில் சுவாமியும், அம்மனும் கன்னி ஊஞ்சலாடிய பின் கோயில் வடக்கு ஆடி, மேல ஆடி சந்திப்பில் நறுமணம் மிக்க வெட்டிவேர்கள் மற்றும் பல வகை வண்ணப்பூக்களாலும், பச்சரிசியாலும், நவதானியங்களாலும் அலங்கரிப்பட்ட திருக்கல்யாண மேடையில் மணக்கோலத்தில் மீனாட்சியம்மனும், சுந்தரேசுவரர் பிரியாவிடையுடனும் தனித்தனியாக எழுந்தருளினர்.

மீனாட்சி திருக்கல்யாணம்

முன்னதாகத் திருக்கல்யாண மேடையில் சுப்பிரமணியசுவாமி தெய்வானையுடனும் பின்னர் மீனாட்சியம்மனும் சுந்தேரசுவரரரும் மேடைக்கு வந்த பின்னர் பவளக்கனிவாய் பெருமாளும் வந்திருந்து மணமேடையில் எழுந்தருளினர்.

திருக்கல்யாண மேடையில் மீனாட்சியம்மனின் வலதுபுறம் பவளகனிவாய் பெருமாளும் சுந்தரேசுவரரின் இடது புறம் சுப்ரமணியசுவாமி, தெய்வானையுடனும் எழுந்தருளினர்.

தொடர்ந்து விநாயகர் வழிபாடு உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் செய்யப்பட்ட பின்னர் பாலிகை இடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையடுத்து மீனாட்சியம்மனுக்கும், சுந்தரேசுவரருக்கும் காப்பு கட்டும் வைபவமும் அதனைத் தொடர்ந்து பல்வேறு பூஜைகளும் நடைபெற்றன.

தொடர்ச்சியாக மீனாட்சியம்மனுக்கும், சுந்தரேஸ்வரருக்கும் மணப்பட்டு சாற்றும் நிகழ்வு நடைபெற்றதையடுத்து கோயில் சார்பில் சுந்தரேஸ்வரருக்குப் பட்டு பீதாம்பரமும், அம்மனுக்குப் பட்டுச்சேலைகளும் சாத்தப்பட்டன. இதனையடுத்துத் தனது தங்கையான மீனாட்சியம்மனை பவளகனிவாய் பெருமாள் தாரைவார்த்துக் கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.

தயாராகும் திருமண விருந்து

தொடர்ந்து மீனாட்சியம்மன் சார்பிலும், சுந்தரேசுவரர் சார்பிலும் பிரதிநிதிகளாக இருந்து சிவாசார்யர்கள் மாலை மாற்றும் வைபவம் நடைபெற்றதைத் தொடர்ந்து வேதமந்திரங்கள் முழங்க, ஹோமம் வளர்க்கப்பட்டு மங்கல வாத்தியங்கள் வாசிக்க வெகுவிமர்சையாகப் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் ரிஷப லக்கனத்தில் மீனாட்சியம்மனுக்கு வைரத்தால் ஆன மங்கல நாண் அணிவிக்கப்பட்டுத் திருக்கல்யாணம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

அப்போது கோயிலில் கூடியுள்ள பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி கோசம் முழங்க மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெற்றவுடன் பெண்கள் தங்களது மாங்கல்யத்தைப் புதுப்பித்துக்கொண்டனர்.

மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாண நிகழ்வைத் தொடர்ந்து சுவாமிக்கும், அம்மனுக்கும் பல்வேறு தீப ஆராதனைகள் காட்டப்பட்டன. திருக்கல்யாணத்தின்போது மட்டுமே  அம்மன் உற்சவத்திற்கு தங்க அங்கி அணிவிக்கப்படும்.

திருகல்யாணத்தையடுத்துக் கோயிலைச் சுற்றிப் பல்வேறு பகுதிகளிலும் பக்தர்களுக்குத் தாலிக்கயிறும் குங்குமம் வழங்கப்பட்டன.

திருக்கல்யாண நிகழ்ச்சிக்காக 30 லட்சம் மதிப்பிலான 10 டன் வண்ண மலர்கள் பயன்படுத்தப்பட்டன. மேலும் 500 கிலோ பழங்கள் மற்றும் நவ தானியங்களால் திருக்கல்யாண மேடை முழுவதும் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருக்கல்யாணத்தைக் காணும் வகையில் கோயில் வளாகத்தை சுற்றிலும் 20 எல்.இ.டி திரைகள் அமைக்கப்பட்டிருந்தன. அதிக வெயிலின் தாக்கத்தைக் குறைக்க 300 டன் தற்காலிக ஏசி பொறுத்தப்பட்டிருந்தது. 1 லட்சம் பைகளில் தண்ணீர் பாட்டில் மற்றும் தாலி கயிறு அடங்கிய பிரசாதம் வழங்கப்பட்டது. மூவாயிரம் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 

ஒரு லட்சம் பக்தர்களுக்கு மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கல்யாண விருந்தும் நடைபெற்றது.   மொய்ப்பந்தலில், திருக்கல்யாண மொய் எழுதி, பிரசாதம் பெற்றுக்கொள்ள மீனாட்சி திருக்கல்யாண வைபவத்தால் மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.