கொல்கத்தா: “மேற்கு வங்கத்துக்கு நாளையே கூட தேர்தல் நடத்துங்கள். நாங்களும், மேற்கு வங்க மக்களும் தயாராகவே இருக்கிறோம்” என்று பிரதமர் மோடிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சவால் விடுத்துள்ளார். மேலும், நேரலை விவாதத்துக்கு வருமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
மேற்கு வங்கத்தின் அலிப்பூர்துவாரில் நகர எரிவாயு விநியோகத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டி பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் ஆட்சி கொடூரமானது (நிர்மம்தா), ஊழல் நிறைந்தது. மக்கள் மாற்றத்தையும் நல்லாட்சியையும் விரும்புகிறார்கள்” என்று தெரிவித்திருந்தார். பிரதமரின் இந்த விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்துள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “நான் உங்களுக்கு (பிரதமர்) சவால் விடுகிறேன். என்னுடன் ஒரு தொலைக்காட்சி நேரடி விவாதத்துக்கு வாருங்கள். நீங்கள், உங்கள் டெலிபிராம்ப்ட்டரையும் கொண்டுவரலாம்” என்று சவால் விடுத்துள்ளார்.
மேலும் அவர் கூறியது: “எதிர்க்கட்சித் தலைவர்கள் சர்வதேச அளவில் தேசத்தின் நலன்களை பாதுகாக்க முயற்சி செய்துகொண்டு இருக்கும் வேளையில், மத்திய அரசு அரசியல் ஹோலி விளையாடிக் கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சிகள் உலக அரங்கில் நமது நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் வேளையில், பிரதமர் மோடி இன்று பேசியிருப்பது எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருப்பதோடு மட்டும் இல்லாமல், வருத்தமடையவும் செய்துள்ளது.
பிரதமர் முன்னிலையில் அவரது அமைச்சர் ஒருவர், ஆபரேஷன் சிந்தூர் போல, ஆபரேஷன் பெங்கால் நடத்துவோம் என்று கூறியுள்ளார். நான் உங்களுக்கு சவால் விடுகிறேன், தைரியம் இருந்தால், நாளையே தேர்தலை நடத்துங்கள். உங்களின் சவாலை ஏற்க நாங்களும், மேற்கு வங்க மக்களும் தயாராக உள்ளோம். ஆனால், தயவுசெய்து காலம் ஒரு காரணி என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள குழுவில் எங்களின் பிரதிநிதி அபிஷேக் பானர்ஜியும் ஓர் அங்கத்தினராக உள்ளார். தினந்தோறும் அவர் பயங்கவாதம், பயங்கரவாதிகளுக்கு எதிராக பேசி வருகிறார். அதேநேரத்தில் மோடியோ பிரதமராக இல்லாமல், பாஜக தலைவராக உங்களுக்கு முழு ஆதரவு அளிக்கும் அரசை (மேற்கு வங்க அரசு) விமர்சிக்கிறீர்கள்.
நீங்கள் மேற்கு வங்க அரசை குற்றம்சாட்டுகிறீர்கள், எதிர்க்கட்சிகளைக் குறைகூற விரும்புகிறீர்கள். இந்த நேரத்தில் பாஜக, ஜூம்லா கட்சிகளைப் போல விஷயங்களை அரசியலாக்க முயற்சிக்கிறது. இந்த மாதிரி பேசுவது சரியாக இல்லை. ஆபரேஷன் சிந்தூர் குறித்து எனக்கு எந்தக் கருத்தும் இல்லை. ஆனால், ஒவ்வொரு பெண்ணுக்கும் மரியாதை உண்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள்” என்று மம்தா சாடியுள்ளார்.
முன்னதாக, பிரதமர் மோடி தனது பேச்சில், மம்தா பானர்ஜியைச் சாடுவதற்கு அவரது பெயரை ‘நிர்மம்தா’ என்று இந்தியில் கொடூரம் என்று பொருள்படும் பதத்தை பயன்படுத்தியிருந்தது கவனிக்கத்தக்கது. மோடி பேசியது என்ன? > “மேற்கு வங்கத்தில் 5 பிரச்சினைகளால் பாதிப்பு; மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்” – பிரதமர் மோடி