புதுடெல்லி: டெல்லியில் உள்ள அரசுப் பள்ளிகளில் வகுப்பறைகள் கட்டுவதில் ரூ.2 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடந்ததாக எழுந்துள்ள புகார் தொடர்பாக விசாரணை நடத்த ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் மணீஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின் ஆகியோருக்கு டெல்லி அரசின் ஊழல் தடுப்புப் பிரிவு (ஏசிபி) சம்மன் அனுப்பியுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
முந்தைய ஆம் ஆத்மி ஆட்சியின்போது டெல்லியில் உள்ள அரசுப் பள்ளிகளில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வகுப்பறைகள் அல்லது அரை நிரந்தர கட்டமைப்புகளை கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் ரூ. 2 ஆயிரம் கோடி அளவுக்கு நிதி முறைகேடுகள் நடந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பாக டெல்லி அரசின் ஊழல் தடுப்புப் பிரிவு கடந்த ஏப்ரல் 30ம் தேதி வழக்குப்பதிவு செய்தது.
இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணையின் ஒரு பகுதியாக, முந்தைய கல்வி அமைச்சரான மணீஷ் சிசோடியாவுக்கும், பொதுப்பணித்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக டெல்லி அரசின் ஊழல் தடுப்புப் பிரிவின் இணை ஆணையர் மதுர் வர்மா தெரிவித்துள்ளார். மேலும் அவர், இவர்கள் மீது மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் (CVC) முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
“சிவிசியின் தலைமை தொழில்நுட்ப ஆய்வாளரின் அறிக்கை, கட்டுமான திட்டத்தில் பல முரண்பாடுகளை சுட்டிக்காட்டியுள்ளது. இந்த அறிக்கை மீது கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தற்போது அனுப்பப்பட்டுள்ள சம்மனில், ஜூன் 6 ஆம் தேதி ஆஜராகுமாறு சத்யேந்தர் ஜெயினுக்கும், ஜூன் 9 ஆம் தேதி ஆஜராகுமாறு மணீஷ் சிசோடியாவுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.” என்று மதுர் வர்மா தெரிவித்துள்ளார்.
ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 17-A இன் கீழ் உரிய அதிகாரியிடமிருந்து ஒப்புதல் பெற்ற பிறகு இவர்களுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதாகவும் மதுர் வர்மா கூறியுள்ளார்.
டெல்லியின் மூன்று மண்டலங்களில் வகுப்பறைகள் கட்டுவதில் கடுமையான நிதி முறைகேடுகள் நடந்ததாகக் கூறி கடந்த 2019 ஆம் ஆண்டு, பாஜக தலைவர்கள் கபில் மிஸ்ரா, ஹரிஷ் குரானா மற்றும் நீல்காந்த் பக்ஷி ஆகியோர் டெல்லி அரசின் ஊழல் தடுப்புப் பிரிவில் புகார் அளித்தனர்.
புகாரில், ஒரு வகுப்பறை கட்டுவதற்கு சராசரியாக ரூ. 24.86 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும், இது போன்ற கட்டமைப்புகளைக் கட்ட ரூ. 5 லட்சம் போதும் என பொறியாளர்கள் மதிப்பிட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டி இருந்தனர்.
இந்த குற்றச்சாட்டு தொடர்பாக தற்போது விசாரணை நடந்து வருகிறது என்றும், விசாரணையின் முடிவுகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.